பணி நிமித்தமாக செல்லவில்லை.. மதுராந்தகம் காவலர்கள் பலி விவகாரத்தில்.. ஆவடி காவல் ஆணையரகம் ட்விஸ்ட்
சென்னை: குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது பெண் காவலர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், காவலர்கள் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிறுநாகலூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா ஆகியோர் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியதில் ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த நித்யா மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நித்யாலும் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக மேல்மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் காவல் துறையினருக்கு, குறிப்பாக பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத இந்த திமுக அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், சென்னை மாதவரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் பெண் காவலர் நித்யா ஆகிய இருவரும் ஒரு வழக்கு தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்றுள்ளனர்.
மதுராந்தகத்தில் இருவரும் இருசக்கர வாகனத்தில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து அவர்கள் இருவரும் எப்படிச் சென்றார்கள் என்று தெரியாத நிலையில் மதுராந்தகம் காவல் துறையினரும் அவர்கள் இருவருக்கும் வேண்டிய வாகன வசதிகளை செய்து தராதது கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த அரசின் அஜாக்கிரதையால் பணியின்போது உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், இனிமேலும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரு பெண் காவலர்களும் அலுவல் நிமித்தமாக செல்லவில்லை என்று ஆவடி காவல் ஆணையரகம் விளக்கமளித்துள்ளது. அதில், மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த இரு பெண் காவலர்கலும் அலுவலர் நிமித்தமாக செல்லவில்லை.
குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. உயிரிழந்த பெண் எஸ்ஐ, பெண் காவலர் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் பழக்கம் உடையவர்கள்.
உயிரிழந்த பெண் காவலர்கள் இருவரும் அண்மையில் இருசக்கர வாகனத்தில் லடாக் சென்று வந்தனர். மதுராந்தகத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications