பி.எட் வினாத்தாள் முன்பே கசிந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி! உடனடியாக அதிரடி முடிவெடுத்த உயர்கல்வித்துறை
சென்னை: இன்று நடைபெறவிருந்த பி.எட். தேர்வு வினாத்தாள் நேற்றே கசிந்த நிலையில் மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. புகாரை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய உயர்கல்வித்துறை, மாற்று வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு அனுப்பி தேர்வை திட்டமிட்டபடி நடத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய பி.எட் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பி.எட் இரண்டாம் ஆண்டு 4வது செமஸ்டர் "Creating an inclusive school" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், காலை 10 மணிக்கு இந்த தேர்வு நடக்கவிருந்த இந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே, அதாவது நேற்று இரவே வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்பப் பெறப்பட்டது. மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றும், பழைய வினாத்தாளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்வு மையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை மாற்று வினாத்தாள் கொண்டு, பி.எட் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. நீட், நெட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications