Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் 1965? இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தின் வீடுகள், வீதிகள் தோறும் வெடித்தது போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலான இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 1938, 1948 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததைப் போன்ற பதற்றமான சூழ்நிலை தற்போது மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தமிழார்வலர்கள்.

இந்தியாவின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக இந்தியை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் 1938, 1948 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு மிகப் பெரிய யுத்தத்தை நடத்தியது. இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போரில் தாளமுத்து நடராசன் தொடங்கி எண்ணற்ற தமிழ் மறவர்கள் வீர மரணம் அடைந்தனர்; கீழப்பழுவூர் சின்னசாமி தொடங்கி பல தியாக சீலர்கள் தங்களது தேக்குமர தேகங்களையே தீக்கிரையாக்கி தாய் மொழி காக்க களமாடிய வரலாறு தமிழ்நாட்டுக்கு உண்டு.

hindi imposition tamilnadu

இந்தி மொழியை அவ்வப்போது மத்திய அரசுகள் திணிக்க முயல்வதும் அதை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் போராடுவதும் காலந்தோறுமான நிகழ்வாகிவிட்டது. தற்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசோ, புதிய கல்விக் கொள்கை- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை வேறு வடிவில் மேற்கொள்கிறது; இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர முடியாது என மிரட்டுகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

மாநிலங்களின் வரிவருவாய்

மத்திய அரசுக்கு என தனியே மக்கள் கிடையாது; மாநிலங்களின் மக்கள் இணைந்ததுதான் மத்திய அரசு. மாநிலங்களின் நிதி வருவாயை பகிர்ந்து கொடுக்கக் கூடிய வேலைதான் மத்திய அரசுக்கு.. ஆனால் தமிழ்நாட்டின் நிதி வருவாயை வாங்கி வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கான நிதி பங்களிப்பை மத்திய அரசு சட்டாம்பிள்ளைத்தனமாக மறுப்பது சர்வாதிகாரம் என்பதுதான் இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் தமிழர்களின் கருத்து.

வீடுகள், வீதிகள் தோறும் போராட்டம்

தற்போதைய இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் நகரங்கள்தோறும் போராட்டங்களை நடத்தினர்; வீடுகள் தோறும் பெண்கள், இந்தி திணிப்புக்கு எதிராக கோலமிட்டு போராட்டம் நடத்தினர்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து சென்னையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தின.

தார்பூசி அழிப்பு- தொடர் போராட்டங்கள்

இதன் உச்சமாக தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழிக்கும் போராட்டங்கள் பொள்ளாச்சி, பாளையங்கோட்டை மற்றும் சங்கரன்கோவிலில் நடைபெற்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நாளை போராட்டம் நடைபெற உள்ளது.

வரி கொடா இயக்கம்- வரி மறுப்பு தீர்மானம்

தமிழ்நாட்டின் தற்போதைய இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட களம் வெவ்வேறு திசைகளை நோக்கி நகருகிறது. தமிழ்நாட்டின் வரி வருவாயை மத்திய அரசுக்கு தரமாட்டோம் என்று சொல்ல ஒரு நொடி போதும் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசுக்கு தமிழ்நாட்டின் வரி வருவாயை தர முடியாது என சட்டசபையை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேல்முருகன், சீமான் போன்றோர் வலியுறுத்துகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட வரி கொடா இயக்கத்தை இப்போதும் நடத்துவோம்; ஆட்சியே கலைக்கப்பட்டாலும் எதிர்கொள்வோம் என்பது இவர்களது அறைகூவலாக இருக்கிறது.

பாஜகவுக்கு எதிரான அலையாகும்

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாஜக தவிர பாஜகவின் கூட்டணி கட்சிகள் கூட இந்தி திணிப்புக்கு எதிரான குரலை வெளிப்படுத்துகின்றன. 1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான யுத்தம் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து காங்கிரஸை வெளியேற்றியது; தற்போதைய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், பாஜக எனும் அரசியல் கட்சிக்கு கிடைக்கக் கூடிய சொற்ப வாக்குகளுக்கும் வாய்க்கரிசி போட்டுவிடும் என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+