சென்னையில் தரமில்லா தண்ணீர் கேன்கள்.. ஆய்வுக்கு சென்ற போது ஷாக்.. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்
சென்னை: கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் கேன்களின் தேவை கிடு கிடுவென அதிகரித்து இருக்கிறது. இந்த கேன்களில் தண்ணீர் சுகாதாரமானதாக உள்ளதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தரமில்லாத குடிநீர் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. தலைநகர் சென்னையை பற்றி சொல்லவே தேவையில்லை. கோடை வெப்பம் தகித்து வருகிறது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெப்பம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. ஆனால் துவக்க காலத்தில் வெப்பத்தின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்து. குறிப்பாக 10 நாட்கள் வெயிலின் தாக்கம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு கோடை வெயில் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கியுள்ளது.
நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்பட 14 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 107.24 டிகிரி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் கேன்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அடைத்து பல நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் கேன்களின் தேவை கிடு கிடுவென அதிகரித்து இருக்கிறது. இந்த கேன்களில் உள்ள தண்ணீர் சுகாதாரமானதாக உள்ளதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சென்னையில் குடிநீர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் விநியோகம் செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல், குடிநீர் விநியோகம் செய்யும் கடைகளில் அவ்வப்போது சோதனையையும் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் தரமில்லாத குடிநீர் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். சென்னையில் குடிநீர் தயாரிக்கும் கொண்டித்தோப்பு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெறாத கடைகளிலும் முறையான அனுமதியின்றி செயல்படும் கடைகளிலும் ஆய்வை நடத்தினர். தரமற்ற குறையில் குடிநீர் விநியோகம் செய்வது... கேன்களில் முறையாக சுத்தம் செய்யாமலும் குடிநீர் விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்தே 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடைகளில் குடிநீரின் தரம் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடி நீர் தரமற்று இருந்தால் சீல் வைக்கவும் முடிவு செய்துள்ளனர். ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் இன்றி சென்னையில் பல நிறுவனங்கள் சென்னையில் குடிநீர் வினியோகம் செய்து வருவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications