ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சென்னை கமிஷனர் தந்த உறுதி.. ஆனால் நடப்பதோ.. பகுஜன் சமாஜ் திடுக்கிடும் கேள்வி
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்த போது அவர் எங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதுடன், இன்னும் நான்கு நாட்களில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என கூறியிருந்தார். ஆனால் நடப்பதை பார்க்கும் போது ஆம்ஸ்ட்ராங் வழக்கு திசை திரும்புகிறதா என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என பகுஜன் சமாஜ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், தனது குடும்பத்தினருடன் சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக வீடு கட்டி வந்தார். இதனால், அவர் தற்காலிகமாக சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் புது வீடு கட்டும் இடத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியை சேர்ந்த 39 வயதாகும் பொன்னை பாலு , சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமி நகர் 3-வது தெருவை சேர்ந்த 45 வயதாகும் திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதாகும் மணிவண்ணன், குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ராமு என்கிற வினோத் (38), அருள் (33), செல்வராஜ் (48) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் போலீசாரை தாக்க முயன்று தப்பிய ஓட முயன்றதாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதேநேரம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் கொடுத்த புகாரில் அதிமுக முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிகரன், சதீஷ் மற்றும் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த கொலை திட்டமிட்டு நிகழ்த்தியது இவர்கள் தான் என்று போலீசார் உறுதியாக அறிவிக்கவில்லை.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டது யார் என்பதும் இதுவரை தெரியவில்லை. அதேநேரம் போலீசார் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. குற்றவாளிகள் அனைவருக்கும் கொலையில் என்னென்ன தொடர்பு என்பதை விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் சென்னை பாரிமுனையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, கோஷங்களை எழுப்பினார்கள்.
இதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலக செயலாளர் தமிழ் மதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் "தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசும் மற்றும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. இந்த வழக்கில் அரசு சார்ந்தவர்கள் யாரும் இல்லாமல் ரவுடிகளை, புதுமுகங்களை காட்டி திசை திருப்புகிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு சரியான திசையில் போகவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்டவர் யார்? அவர் தான் இதில் முக்கிய சாட்சியாக இருப்பாரோ என்ற சந்தேகமும் எங்களுடைய கட்சியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட எங்கள் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை ரவுடியைப் போல் சித்தரிக்கின்றனர். ஆனால், அவர் தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் தற்போது கைதாகியுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிந்ததும், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.
எனவே உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு குறித்து சென்னை மாநகர ஆணையாளரிடம் மனு அளித்த போது அவர் எங்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பதில் தந்தார். இன்னும் நான்கு நாட்களில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று எங்களிடம் கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வழக்கு திசை திரும்புகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக இருந்த சென்னை மாநகர காவல் ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் எங்களுக்கு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை படுகொலை செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications