வானில் தெரிந்த பிறை.. தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டம் - அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: வானில் பிறை தென்பட்டதால் தமிழ்நாட்டில் ஜூன் 7 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனிதத் திருநாள் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய இறைத் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இறைத்தூதர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இப்ராஹிம் இறைவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டு தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தப் புனித பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் இஸ்லாமியப் பெருமக்கள் புத்தாடை அணிந்து, சிறப்புத் தொழுகை நடத்தி குர்பானி கொடுப்பது வழக்கம். ஏழை, எளிய மக்கள், நண்பர்களுக்கு அசைவ உணவு சமைத்து முஸ்லிம் மக்கள் வழங்குவார்கள்.
பிறை தெரிவதன் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகையும் நிச்சயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அங்கு மே 26 ஆம் தேதி பிறை நிலவு காணப்பட்டதால், துல் ஹிஜ்ஜா மாதம் தொடங்கியது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வானில் இன்று பிறை தென்பட்டுள்ளது. இதனால், 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, தலைமை காஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது.
ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) சனிக்கிழமை 07-06-2025 கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications