பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமியர்களால் நாடு முழுக்க விமர்சையாக கொண்டாட்டம்.. குடியரசுத் தலைவர் வாழ்த்து!
சென்னை; ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை நாடு முழுக்க இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அன்பையும் தியாகத்தையும் வெளிக்காட்டும் விழா பக்ரீத். இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் பக்ரீத் திருநாளும் ஒன்று. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளார் தனது மகன் நபி இஸ்மாயிலுக்கு பதிலாக ஆட்டை பலி கொடுத்ததை நினைவு கூறும் வகையிலும், அவரின் தியாகத்தை போற்றும் வகையில் ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
பலி தருதல் என்ற இஸ்லாமிய கடமைகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் இன்று அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து கொடுத்து இஸ்லாமியர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். இந்த விழா ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகின்றது.
உலகம் முழுக்க இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களால் இந்த விழா விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் இன்று பக்ரீத் திருநாள் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் ஆய்யூப் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து பக்ரீத் நாளையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா காலம் என்பதால் போதிய சமூக இடைவெளியுடன் நாடு முழுக்க பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் திருநாள் பகிர்ந்து அளிக்கும் பண்பை போதிக்கும் நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தங்களிடம் உள்ள உணவையும், பொருளையும் பகிர்ந்து அளிக்கும் தினமாகும் இது.
Eid Mubarak to all fellow citizens. Eid-uz-Zuha is a festival to express regard for the spirit of love and sacrifice, and to work together for unity and fraternity in an inclusive society. Let us resolve to follow COVID-19 guidelines and work for happiness of all.
— President of India (@rashtrapatibhvn) July 21, 2021
இன்று கொண்டாடப்பட்டும் பக்ரீத் பண்டிகைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சக குடிமகன்கள் எல்லோருக்கும் பக்ரீத் நாள் வாழ்த்துக்கள். இந்த நாள் அன்பையும், தியாகத்தையும் உணர்த்தும் நாள். சமுதாய ஒற்றுமை, சகோதரத்துவத்தை போதிக்கும் நாள் இது. கொரோனா விதிகளை பின்பற்றி எல்லோரும் இந்த நாளில் மகிழ்ச்சியாக இருப்போம், என்று அவர் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.