அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அவதூறு கருத்துகளை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை நீட்டிப்பு- ஹைகோர்ட்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவதூறு பரப்ப தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வந்ததாக தெரிகிறது.
தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இதையடுத்து தன்னை குறித்து அவதூறு கருத்தைகளை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார் செந்தில் பாலாஜி! முட்டாள் மாதிரி தெரியுதா! வரிந்து கட்டும் வானதி!
சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனுவுக்கு நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நிர்மல் குமார் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன.
மறைப்பதற்கு
தன் மீதான முறைகேடுகளை மறைப்பதற்காகவே எனக்கு எதிராக அமைச்சர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருந்த ஒரு பேட்டியில் மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
புகார்
அதை அடிப்படையாக கொண்டே புகார் அளித்திருந்தேன். எனவே எனது குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது ஏற்புடையதல்ல. செந்தில் பாலாஜி குறித்து நான் பேசுவதற்கு தடை விதித்துள்ளது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. எனவே அந்த தடையை நீக்க வேண்டும். செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் நிர்மல் குமார் கோரியிருந்தார்.
தடை நீட்டிப்பு
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்திருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி குறித்து அவதாறு கருத்துகளை வெளியிட பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.