Hormuz-ஐ கன்ரோலில் எடுக்கும் ஈரான்.. வேடிக்கை பார்க்கும் டிரம்ப்.. இதுதான் புயலுக்கு முன் அமைதியா?
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் மிக முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. உலகின் மிக முக்கிய எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாக அமைப்பை ஈரான் அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக உலக எண்ணெய் சந்தை, கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்று. உலகில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவில் சுமார் 20 சதவீதம் இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து ஐரோப்பா, இந்தியா, சீனா என ஒட்டுமொத்த ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய பாதை இதுவாகும்.
எண்ணெய் - எரிவாயு மட்டுமல்ல, உரங்கள், ரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களும் இந்த வழியாகத்தான் உலக சந்தைகளைச் சென்றடைகின்றன. எனவே, இந்தப் பாதையில் ஏற்படும் சிறிய பாதிப்பும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்பதாலேயே இந்தியாவில் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ளது.
ஈரானின் புதிய திட்டம்
ஈரான் ஏற்கெனவே ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய நிர்வாக அமைப்பு, இந்தக் கட்டண வசூல், கடல் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பாதை நிர்வாகத்தை முழுமையாக கையாளும் என அறிவித்துள்ளது.
ஈரான் ஹார்முஸ் நுழைவு வாயிலை கண்ணி வெடிகள் வைத்தது மூலம் மொத்த வழித்தடத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் பாதுகாப்பான வழித்தடத்தில் ஈரான் தான் அழைத்து செல்கிறது. இவை அனைத்தையும் தற்போது புதிய அமைப்பு மூலம் நிர்வாக ரீதியாக செய்ய முடிவு செய்துள்ளது.
ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஹார்முஸ் வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் புதிய விதிமுறைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு மூலம் ஈரான் தனது அதிகாரத்தை நீண்டகால அடிப்படையில் உறுதிப்படுத்த முயற்சிக்கிறது என்று சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன.
அமெரிக்கா கடந்த ஒரு வாரமாக சீன சுற்று பயணத்தில் பிசியாக இருந்த வேளையில் ஈரான் விவகாரத்திலும், அமைதி பேச்சுவார்த்தையிலும் கவனம் செலுத்தவில்லை. இப்படியிருக்கையில் ஈரான் புதிய அமைப்பு உருவாக்கியது தொடர்பாக அமெரிக்கா அமைதி காத்து வருகிறது.
மேலும் நேற்று டிரம்ப் வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில் "ஈரானுக்கு நேரம் குறைந்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்கா உடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது" என்று கூறியுள்ளார்.
போர் பதற்றத்துக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது கட்டுப்பாட்டை கடுமையாக்கியது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும், "போருக்கு முந்தைய நிலைக்கு கடல் போக்குவரத்து திரும்பாது" என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா தனது கடற்படை கப்பல்கள் உடன் ஈரான் துறைமுகங்களை மொத்தமாக முடங்கியுள்ளது.
இந்தப் புதிய அமைப்பு உருவாக்கம், ஈரான் தனது பொருளாதார மற்றும் ஆதிக்கத்தை பலப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பெரிய அளவில் கிட்டத்தட்ட மொத்தமாக குறைந்திருக்கும் வேளையில் இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், உரங்கள், போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
உலக சந்தைகளில் ஏற்கெனவே எண்ணெய் விலை, கப்பல் காப்பீட்டு கட்டணம் மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications