இலவச பஸ் பயணம் பெண்களுக்கு! கேரளா புதிய முதலமைச்சர் வி.டி.சதீசன் போட்ட முதல் கையெழுத்து! 3 சர்ப்ரைஸ்
சென்னை: கேரளாவில் டி.சதீசன் ஒருவழியாகப் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.. திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகப் பதவியேற்ற கையோடு கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு உள்ளிட்ட பல அதிரடி நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.. இது அம்மாநில மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கேரள அரசியல் களத்தில் கடந்த 10 வருட காலமாக அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணியின் கோட்டை, நடப்பு சட்டசபை தேர்தல் முடிவுகளால் மொத்தமாகச் சரிந்து விழுந்துள்ளது. யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அதிகார மாற்றமாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை வாரிக் குவித்து தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இலவச பஸ் பேருந்து பயணம்
10 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட இந்த பரபரப்பான சூழ்நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி திருவனந்தபுரம் முதல் டெல்லி வரை தீயாய் பரவியது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன் ஆகிய 3 பேருக்குமே இடையே முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்ற ஏகப்பட்ட திரைமறைவு மல்யுத்தம் நடைபெற்றது.
மகளிருக்கு பேருந்து பயணம்
சுமார் 10 நாட்கள் நீடித்த இந்த தீவிர அரசியல் இழுபறியும், நள்ளிரவுப் பேச்சுவார்த்தைகளும் ஒட்டுமொத்த கேரளாவையும் ஸ்தம்பிக்க வைத்தன. கடைசியில் காங்கிரஸ் மேலிடத்தின் அதிரடி தலையீட்டால் வி.டி.சதீசன் ஒருவழியாக முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
உடனே கவர்னர் ஆர்.வி. அர்லேக்கரை நேரில் சந்தித்து, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார் சதீசன். இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்குக் கூடிய பிரம்மாண்ட மக்கள் கடலுக்கு மத்தியில், கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் அதிகாரப்பூர்வமாகப் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.
கேரளா முதல்வரின் முதல் கையெழுத்து
பதவியேற்று முடித்த சில நிமிடங்களிலேயே, கொஞ்சமும் தாமதிக்காமல் புதிய முதலமைச்சர் கூட்டத்தைக் கூட்டியது அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது. இந்த முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, மாநில மக்களின் கவனத்தைத் திருப்பும் வகையிலான பல அதிரடி நலத்திட்ட உத்தரவுகள் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டன.
இதில் மிக முக்கியமாக, ஜூன் 15 முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளின் பொருளாதார சுமையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கேரளாவின் வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் நலனைப் பேணிக் காப்பதற்காக, ஒரு பிரத்தியேகத் தனி அமைச்சகத் துறையை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாதாந்திர மதிப்பூதியம்
மறுபுறம், நீண்டகாலமாக சம்பள உயர்வு கோரி கேரள தலைமைச் செயலகத்திற்கு முன்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஆஷா பணியாளர்களின் கோரிக்கைக்கு இந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தில் மூன்று ஆயிரம் ரூபாய் அதிரடியாக உயர்த்தி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அடித்தட்டு பொதுச்சேவை ஊழியர்களின் மாதாந்திர ஊதியமும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனப் புதிய முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆட்டத்தை துவங்கிய புதிய அரசு
அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு விவகாரங்களில் தங்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடங்கியுள்ள புதிய அரசு, கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற நவ கேரள யாத்திரையின்போது, இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு புதிய சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைக்க முடிவு செய்துள்ளது.
மேலும் மாநிலத்தின் நிதி மேலாண்மையில் கடுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தற்போதைய பொதுக் கடன் குறித்த நிதி வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
புதிய 16-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் மே 21-ம் தேதி தொடங்கவுள்ளதோடு, மே 22 அன்று புதிய சபாநாயகருக்கான தேர்தலும் நடைபெறவிருப்பதால், கேரள அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது...!!












Click it and Unblock the Notifications