அடப்பாவிகளா.. இன்றும் வைபவ் சூர்யவன்ஷியை சேர்க்கலையா.. சின்னப்பையனை சோதிக்கும் கவுதம் கம்பீர்!
பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் மற்றும் சூர்யாவன்ஷ் ஷெட்கே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமெ இந்திய அணி டி20 தொடரை சமன் செய்ய வேண்டும். இதனால் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப தொலைக்காட்சி விளம்பரங்களில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டங்களையே ப்ரோமோவாக வெளியிட்டனர். ஆனால் 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒன்று பிரின்ஸ் யாதவ்.. இன்னொருவர் சூர்யான்ஷ் ஷெட்கே என்றார். பிரின்ஸ் யாதவ் ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு திறமையை நிரூபித்தார். இதனால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் பேட்டிங்கில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஸ்ரேயாஸ் ஐயர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை காண உலகமே காத்திருக்கிறது. வைபவ் சூர்யவன்ஷிக்காக அவரது பெற்றோரும் பெல்பாஸ்ட் நகரில் அவருடன் இருக்கின்றனர். ஆனால் 2 போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் 15 வயதாகும் சிறுவனின் பொறுமையை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே சோதிப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து டி20 தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் அறிமுகம் இங்கிலாந்து போன்ற வலிமையான அணிக்கு எதிராக அமைய வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications