அடுத்தடுத்து கைது.. அதிரடி ரெய்டு! தடதடக்கும் அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அயோத்திக்கு சாமி கும்பிட வருபவர்கள் செலுத்திய காணிக்கையில் கோயில் நிர்வாகம் கை வைத்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லவ் குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, ரமாசங்கர் யாதவ் உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகளிலும் போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர். இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் ஆதார், பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள்
இந்த முறைகேடு தொடர்பாக அவினாஷ் சுக்லா, அனுகல்ப் மிஸ்ரா, லவ் குஷ் மிஸ்ரா, மனிஷ் குமார் யாதவ், கருணேஷ் பாண்டே, ராம் சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் ரமாசங்கர் என்கிற தின்னு யாதவ் ஆகிய எட்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோயிலில் வரும் ரொக்கப் பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
உத்தரப் பிரதேச அரசால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (SIT) அளித்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 79.85 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
நீதிமன்ற நடவடிக்கை
கைது செய்யப்பட்ட 8 பேரும் தற்போது ஜூன் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாளை அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது, அவர்களைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த முறைகேடு குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
வாயை கட்டி, வயிற்றை கட்டி.. சம்பாதிக்கும் பணத்தை, கோயில் நன்கொடையாக பக்தர்கள் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த பணத்திலும் முறைகேடு நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இது சமீபத்தில்தான் நிறைவேறியது. பாஜக ஆட்சியில்.. அதுவும் யோகி ஆட்சியில் ராமர் கோயில் கட்டப்பட்டது தங்கள் ஆட்சிக்கு மைலேஜ் தரும் என்று பாஜக எதிர்பார்த்திருந்தது. ஆனால், தற்போது கோயிலுக்குள் நடக்கும் பிரச்சனையெல்லாம் பார்க்கும்போது.. எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.














Click it and Unblock the Notifications