பாகிஸ்தானில் தாக்குதல்.. பின்னணியில் இந்தியா? ஆதாரமே இல்லாமல் அள்ளிவிடும் பாக். அரசு.! பின்னணி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்ற ஆதாரமில்லாத குற்றச்சாட்டைப் பாகிஸ்தான் சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ள வெளியுறவு அமைச்சகம், பிற நாடுகளைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, தன் சொந்த மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் வளாகத்தின் மீது நேற்று சனிக்கிழமை மாலை பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என ஆதாரமே இல்லாமல் பாகிஸ்தான் அத்துமீறிக் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு இந்தியா இப்போது பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா மறுப்பு
இந்த கேள்விகளுக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இதை முற்றிலுமாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார். அவர் மேலும், "கராச்சியில் நடந்த அண்மைய சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
மற்றவர்கள் மீது குற்றஞ்சாட்டுவதைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாகத் தனது நாட்டின் எல்லைக்குள் செயல்படும் பயங்கரவாத நெட்வொர்க்கை ஒழிக்க வேண்டும்.. பாகிஸ்தான் தனது உள்விவகாரங்களை உற்று நோக்கி, தன் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்தை தங்களின் அரசு கொள்கையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் போக்கை நிறுத்தி கொள்வதே நல்லது" என்றார்.
சிந்து ரேஞ்சர்ஸ்
கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜவஹர் பகுதியில் அமைந்துள்ள சிந்து ரேஞ்சர்ஸ் அமைப்பின் பித்தாய் பிரிவு தலைமையகத்திற்குள், சனிக்கிழமை மாலை ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் அதிரடியாகப் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரின் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வழியாக வாகனத்தை மோதி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த கட்டிடங்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச் சண்டை
அதைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. பின்னர் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு கமாண்டோக்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரும் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். சுமார் 90 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கி சண்டையில், ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் காயமடைந்த ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டார் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலில் சிந்து ரேஞ்சர்ஸ் அமைப்பைச் சேர்ந்த நான்கு துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்..
தாலிபான் அமைப்பு!
தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்போடு தொடர்புடைய ஜமாத்-உல்-அஹ்ரார் என்ற பயங்கரவாதக் குழு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன்பும் பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் அரசு நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல கொடூரமான தாக்குதல்களுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 அக்டோபரில் கராச்சி விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் இரண்டு சீனப் பொறியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, கராச்சியில் நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். மேலும், 2023ஆம் ஆண்டு கராச்சி போலீஸ் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, தாலிபான் ஆதரவு பயங்கரவாதிகளால் அந்த நகரில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகவும் இது கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications