லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க எம்ஜிஎம் நிறுவனத்திற்கு தடை!
சென்னை: சென்னை கிண்டி கத்திபாரா அருகே உள்ள ஹோட்டல் லீ ராயல் மெரீடியனை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்க தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
தொழிலதிபர் பெரியசாமி பழனிக்கு சொந்தமானது அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் சென்னை மற்றும் கோவையில் லீ மெரீடியன் ஹோட்டல்களை நடத்தி வருகிறது.
இந்த அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு ரூ 18 கோடி நிலுவைத் தொகை கொடுக்க வேண்டியிருந்தது.
இந்திய சுற்றுலா நிதி கழகம்
இந்த தொகையை கொடுக்க உத்தரவிட வேண்டும் என தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதிக் கழகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இந்திய சுற்றுலா நிதி கழகத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடுக்குமாறு அப்பு ஹோட்டல்ஸுக்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டு கால அவகாசமும் வழங்கியது. ஆனால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம் கொடுக்காததால் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொகையை வாராக்கடனாக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் அறிவித்தது.
அப்பு ஹோட்டல்ஸ் நிர்வாகம்
அதன் பின்னர் கொரோனா சூழலால் இந்த தொகையை அப்பு ஹோட்டல்ஸ் கொடுக்காததால் அந் நிறுவனத்திற்கு எதிராக தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் திவால் நடவடிக்கையை எடுத்தது. அப்பு ஹோட்டல் நிர்வாகம் பாதுகாக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு ரூ. 340 கோடி ரூபாயும், பாதுகாப்பற்ற நிதி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு ரூ. 49.13 கோடி ரூபாய் அளவிலான கடன்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சொத்துகளை விற்கும் முயற்சி
இதனால் அப்பு ஹோட்டல்ஸ் தங்களது சொத்துகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் கோடாக் ஸ்பெஷல் சிச்சுவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லீ மெரிடியன் ஹோட்டலை வாங்க முன்வந்தன. இறுதியில் வெறும் ரூ 423 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முன்வந்தது.
1600 கோடி
சுமார் 1600 கோடி மதிப்பிலான ஹோட்டலை வெறும் ரூ 423 கோடிக்கு ஏலத்தில் எடுப்பதற்கு அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அதிக மதிப்புள்ள சொத்தை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என தெரிவித்திருந்தார்.
கடனை செலுத்த தயார்
மேலும் கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும் 450 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும், இதற்கு 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் பெரியசாமி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த நிலையில் லீ மெரீடியன் ஹோட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்க தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.