மே 31 வரை தடை.. சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க கூடாது.. தமிழக அரசு
சென்னை: சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க மே 31ம் தேதி வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் நேற்றுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் 4வது முறையாக லாக்டவுனை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னதாக மகாராஷ்டிரா , தமிழகம், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் லாக்டவுனை மேலும் நீட்டிப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தன. இப்போது நாடு முழுவதும் லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது.

இந்த லாக்டவுனில் நிறைய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் சுற்றுலாவுக்கு தடை, திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தடை. உள்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதித்துள்ளது.
அதேநேரம் மே 31 வரை மத்திய அரசு லாக்டவுனை நீட்டித்துள்ள போதிலும் எந்த பகுதி பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என்பதை வரையறுக்கும் விஷயத்தை மாநில அரசிடமே விட்டுவிட்டது.
இந்த சூழலில் மாநில அரசுகள் விரும்பினால் சிவப்பு மண்டலங்களிலும் முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை திறந்து கொள்ள முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.
எனினும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க விதிக்கப்பட்ட தடை மே 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications