எப்போதும் போல கண்டும் காணாமல் முதல்வர் இருக்க கூடாது.. பாலாற்றில் தடுப்பணையா? கொந்தளித்த எடப்பாடி
சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பு அணை கட்டப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இந்த நிலையில், எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரை வார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பு அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு என்றும் பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோ மீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.
முல்லைப் பெரியாறு, காவிரி - மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.
எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று அறிவித்தார். பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும். ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு ஆகும். அதனை பொன்னாக மாற்றுவது உங்கள் பொறுப்பு என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications