சீலிங் ஃபேனில் வளைந்த பிளேடு.. என் மகளையா தப்பு கண் பாக்குற.. சினிமா பாணியில் காதலனை சாய்த்த தாய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 13 வயதுடைய தன்னுடைய மகள் மீது தப்பான எண்ணம் கொண்ட லிவ்-இன் காதலனை, பெற்ற தாயே தனது தங்கையுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளார்.. இந்த சம்பவம் காசியாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையை தற்கொலை போல ஜோடிக்க இவர்கள் நடத்திய நாடகம்தான் தற்போது பலரையும் திகைக்க வைத்துள்ளது. என்ன நடந்தது உத்தரப் பிரதேசத்தில்?

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் ட்ரோனிகா சிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ஜாகிர். இவருக்கும் கிரண் என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களாகப் பழக்கம் இருந்திருக்கிறது. இருவரும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கிரணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களும் இவர்களுடன்தான் ஒரே வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.

ceiling Fan blade uttar pradesh murder mother

ஃபேன் பிளேடை வளைத்து

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிரணின் 13 வயது மகள் மீது ஜாகிருக்கு தவறான பார்வை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயல்வதாக கிரணுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி பயங்கர சண்டையும் வெடித்திருக்கிறது.

இப்படியே போனால் தன்னுடைய மகளின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று பயந்த கிரண், ஜாகிரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்குத் தனது சகோதரி காஷிஷையும் துணையாக சேர்த்துக் கொண்டார். கடந்த 23-ம் தேதி, பிளான் செய்தபடி கிரணும் அவரது சகோதரியும் சேர்ந்து, வீட்டில் இருந்த ஜாகிரை கட்டையால் தலையில் பலமாகத் தாக்கியிருக்கிறார்கள்.. இதில் அவர் மயங்கி விழுந்து விடவும், உடனே ஒரு துண்டை எடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.

சினிமா பாணியில் ஸ்கெட்ச்

இதற்கு பிறகு கொலையை மறைக்க சினிமா பாணியில் ஒரு டிராமாவும் போட்டிருக்கிறார்கள்.. அதாவது ஜாகிரின் கழுத்தில் கட்டிய துண்டை அப்படியே சீலிங் ஃபேனில் கட்டி விட்டார்கள்.. பிறகு விசிறியின் பிளேடுகளை வளைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டது போலவும் செட்டப் செய்தார்கள்.

அடுத்ததாக, ஜாகிரின் தம்பி சமீர் கானுக்குப் போனை போட்டு, "உங்க அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார்" என்று பதறியபடியே தகவல் கொடுத்திருக்கிறார்கள். கடைசியாக கொலைக்கு பயன்படுத்திய கட்டையை மொட்டை மாடி தண்ணீர் தொட்டிக்கு பின்னால் ஒளித்து வைத்துள்ளனர்.

உளறி கொட்டிய சகோதரிகள்

இதையடுதது தகவலறிந்து வந்த போலீசார் ஜாகிரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கிரண் மற்றும் அவரது சகோதரியின் பேச்சில் போலீசாருக்கு லேசாக சந்தேகம் எழுந்தது. 2 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்று, போலீசார் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். வேறு வழியின்றி 2 பேருமே போலீசாரிடம் சிக்கி விட்டனர்.. பிறகு கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து ஏ.சி.பி. சித்தார்த் கவுதம் சொல்லும்போது, "மகள் மீது ஜாகிர் தவறான எண்ணம் வைத்திருந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கிரணும் அவரது சகோதரியும் சேர்ந்து இந்த கொலையைச் செய்துள்ளனர்" என்றார். மகளைக் காப்பாற்ற பெற்ற தாயே காதலனை தங்கையுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+