துர்கா ஸ்டாலின் சீர்காழி ரோட்டில் கால் வைத்ததுமே.. சென்டிமெண்ட் கோட்டையை உடைக்க திமுக வியூகம்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தேர்தல் களத்தில் நேரடியாக இறங்கி சீர்காழி தொகுதி வேட்பாளருக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனது சொந்த ஊரான திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் இந்தத் திடீர் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகவும், விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட தொகுதியாகவும் விளங்கும் சீர்காழி (தனி), நடப்புத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் எதிர்பார்ப்பில் உள்ளது.. ஆதிதிராவிடர்கள் மற்றும் வன்னிய சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் இத்தொகுதியில், இம்முறை மும்முனைப் போட்டியையும் தாண்டி பலப்பரீட்சை தீவிரமடைந்துள்ளது.

சீர்காழி சென்டிமெண்ட்
திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில்செல்வன், அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, நாம் தமிழர் கட்சியின் சுபாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் கோபிநாத் என 4 முனைப் போட்டி களத்தை அதிரவைக்கிறது.
கொள்ளிடம் தடுப்பணை, நெல் சேமிப்புக் கிடங்கு, ரயில்வே மேம்பாலம் போன்ற நீண்டகால மக்களின் கோரிக்கைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தமிழக அரசியலின் "தீர்க்கதரிசி தொகுதி" என்ற சென்டிமென்ட் இத்தொகுதியை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.
அரசியல் களம் கண்ட மருமகள்
தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு வேட்பாளருக்காகவும் நேரடியாக வீதிக்கு வந்து வாக்கு சேகரிக்காத முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதன்முறையாக சீர்காழியில் களம் இறங்கியிருப்பது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக நிழலாக மட்டுமே இருந்து வந்தவர், தற்போது சீர்காழி வீதிகளில் துண்டுப் பிரசுரங்களை ஏந்தி மக்கள் சந்திப்பு நடத்தியிருப்பது, திமுக இத்தொகுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
சீர்காழி சென்டிமென்ட் என்ற மேஜிக்
துர்கா ஸ்டாலின் இவ்வளவு தீவிரமாகச் செயல்படுவதற்கு பின்னால் ஒரு நீண்டகால அரசியல் நம்பிக்கை ஒளிந்திருப்பதையும் மறுக்க முடியாது.. "சீர்காழியில் எந்தக் கட்சி ஜெயிக்கிறதோ, அந்தக் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்" என்ற சென்டிமென்ட் பல வருடங்களாகவே இங்கே நிலவி வருகிறது. இதனால் இந்த தொகுதியை ஒரு தீர்க்கதரிசி தொகுதி என்றே அரசியல் வட்டாரங்கள் அழைக்கின்றன.
தன்னுடைய கணவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க, இந்த சென்டிமென்ட் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதில் துர்கா ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
சின்னம் & மாஸ் பிளான்
முதலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டாலும், புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இருக்கும் காலதாமதத்தைத் தவிர்க்க, ராஜதந்திர நகர்வாக உதயசூரியன் சின்னத்திலேயே செந்தில் செல்வனை நிறுத்த திமுக தலைமை முடிவு செய்ததாம்.. இந்த வெற்றியை உறுதி செய்ய, முதல்வர் ஸ்டாலினும் நாகையில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை சீர்காழிக்கு மாற்றினார்.
வாக்கு சேகரிப்பின் போது, "இந்த ஊர் மருமகனாக வந்திருக்கிறேன்" என்று ஸ்டாலின் சென்டிமென்ட் கார்டை இறக்க, துர்கா ஸ்டாலினோ தனது சொந்த ஊரான திருவெண்காடு இத்தொகுதியிலேயே வருவதால், ஒரு 'உள்ளூர் பெண்ணாக' மக்களுடன் உரையாடினார். சுமார் ஒரு மணி நேர நடைபயணம், நேரடி மக்கள் சந்திப்பு என துர்கா ஸ்டாலினின் இந்த வேகம், சீர்காழி கோட்டையைத் திமுக கூட்டணியின் கைகளில் பத்திரமாக வைத்திருக்க எடுக்கப்பட்ட அக்னிப் பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் அதிகார மையத்தை நிர்ணயிக்கும் இந்த 'சீர்காழி சென்டிமென்ட்' இந்த முறையும் பலிக்குமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications