"திராவிட வெற்றிக் கழகமா (DVK)"? அறிவிப்பு விரைவில்! அரசியலுக்கு வருகிறாரா பிக்பாஸ் அபிராமி?
சென்னை: பிக்பாஸ் அபிராமி, திராவிட வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ள நிலையில் திராவிட வெற்றிக் கழகம் என அபிராமி குறிப்பிட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். 2017ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்றவர். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "Ctrl Alt Del" எனும் யூடியூப் சீரிஸ் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'NOTA' எனும் படத்தின் மூலம் திரைப்படங்களில் அடியெடுத்து வைத்தார். 2019ஆம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸான களவு படத்தில் நடித்திருந்தார்.
அதே ஆண்டு அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்திலும் நடித்து அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து "ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்", "வான் மூன்று", "துருவ நட்சத்திரம்", "வல்லான்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
டான்ஸ் ஜோடி டான்ஸ், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அடையாளத்தை பெற்றார் அபிராமி. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "நினைத்தேன் வந்தாய்" எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை அபிராமி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் "திராவிட வெற்றிக் கழகம்" என தலைப்பிட்டு பொதுமக்கள் மத்தியில் நின்று புகைப்படம் எடுப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
இது கட்சியின் அறிவிப்பா, இல்லை படத்தின் போஸ்டரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குநரும் நடிகருமான ஆர் பார்த்திபன், இன்று மாலைக்கு அரசியல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் என அறிவித்திருந்தார்.
இதனால் அவர் அரசியலில் குதிக்கிறாரோ, எந்த கட்சியில் இணைவாரோ என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஆனால் அவரோ தான் நடிக்கும் படத்தின் ஸ்டில்லை வெளியிட்டிருந்தார்.

"நான் தான் சிஎம்" என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்திருந்தார். இந்தப் படத்தை அவரே எழுதி இயக்குவதுடன், சிங்காரவேலன் என்ற முதலமைச்சர் வேட்பாளர் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளார்.
பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான வாசகத்துடன் அவருடைய ஸ்டைலில் வெளியிட்டார். பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்! போடுங்கம்மா ஓட்டு Boat'சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்.... 'சோத்துக் கட்சி' என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அபிராமியும் திராவிட வெற்றிக் கழகம் என கட்சியின் பெயரை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டதா, யார் தூண்டி அபிராமி அரசியலுக்கு வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும் சிலர் இது ஏதாவது படத்தின் பெயராகவும் பிரமோஷனாகவும் இருக்கலாம் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications