கூடையை திறந்து பார்த்து அலறிய கஸ்டம்ஸ் அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சம்பவம்! விசாரணையில் ஷாக்!
சென்னை: சென்னைக்கு இன்று விமானத்தில் கடத்தி வரப்பட்ட ஆப்பிரிக்க கருங்குரங்கு, 2 மலைப் பாம்புகள், அரிய வகை அணில், ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் இன்று சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு வந்த சென்னையை சேர்ந்த முகமது மீரா சர்தார் அலி என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் ஒரு சில அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றதால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காற்றோட்டமான பெட்டிகளில் பல்வேறு வகையான வன உயிரினங்களை அவர் மறைத்து வைத்து கொண்டு சென்றதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அரிய வகையான 4 கண் ஆமைகள், சிவப்புக் கால் ஆமைகள், பைத்தான் வகையை சேர்ந்த 3 மலைப்பாம்புகள், 2 அரிய பறக்கும் அணில்கள், ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்கு என மொத்தம் 22 உயிரினங்களை அவர் கூடையில் வைத்து கொண்டு வந்துள்ளார். வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (WCCB) அதிகாரிகளின் உதவியுடன், கடத்தி வரப்பட்ட உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டன.

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படும் இந்த உயிரினங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த உயிரினங்களுக்கு தேவையான தீவனங்களை அளித்து அவை ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
அபாயகரமான உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தியதில், சென்னையில் உள்ள ஒருவர் இந்த உயிரினங்களை கொண்டு வரச் சொன்னதாகவும், அவரிடம் கொடுப்பதற்காக தான் கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், முகமது மீராவுக்காக சென்னை ஏர்ப்போர்ட்டுக்கு வெளியே காத்திருந்த மற்றொரு நபரான முகமது இட்ரிஸ் என்பவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து, அவர்களை அழைத்து கொண்டு கொளத்தூர் பகுதியில் உள்ள, முகமது மீரா கூறிய நபரின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். ஆனால் அந்த வீட்டில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு இருந்த நட்சத்திர ஆமைகள், மலைப்பாம்பு உள்ளிட்ட சில அபூர்வ வகை உயிரினங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த பயணியிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பறிமுதல் செய்யப்பட்ட அரியவகை உயிரினங்கள் பல சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறையாம். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்களை தாய்லாந்துக்கு திரும்பி அனுப்ப முடிவு செய்துள்ள அதிகாரிகள், அதற்கான முழு செலவையும் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications