பைக் டாக்ஸிக்கு தடை போடுறீங்களே.. ஆட்டோக்காரங்க மனசாட்சியோடயா காசு வாங்குகிறாங்க? - ப்ளூ சட்டை மாறன்
சென்னை: பைக் டாக்ஸி சேவையை தடை செய்யும் விதமாக தமிழக அரசின் போக்குவரத்து துறை ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் நியாயமான கட்டணத்தைதான் வசூலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதேபோல ஓரிரு கிலோ மீட்டர் தொலைவுக்கே ரூ.150-200 வரை ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, ஆட்டோவுக்கு மாற்றாக வேறு ஒரு போக்குவரத்து முறை மக்களுக்கு தேவையாக இருந்தது. இப்படித்தான் பைக் டாக்ஸி முறை உள்ளே வந்தது. 4-5 கி.மீ தூரம் என்றாலும் கூட ரூ.100க்குள்தான் கட்டணம் வருகிறது. எனவே, இது சாமானிய மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

நாளடைவில் பைக் டாக்ஸி மிகப்பெரிய அளவில் வளர்ந்தது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இதனால் பெரிய அளவில் இழப்பீடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. பல்வேறு இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்களில் குதித்தனர். மறுபுறம் பைக் டாக்ஸி பாதுகாப்பானது இல்லை என்று அவ்வப்போது நடக்கும் விபத்துகளும், பெண் பயணிகள் மீதான பாலியல் அத்துமீறல்களும் நிரூபித்தன. இதனையடுத்து பைக் டாக்ஸிக்கு எதிரான குரல்கள் தீவிரமடைந்தன.
இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக (Bike-Taxi) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பைக் டாக்ஸி சேவைகள் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அரசின் இந்த உத்தரவு குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். அதாவது, "Rapido போன்ற பைக் டாக்சிகள் தங்கள் பிழைப்பில் மண்ணை போடுவதாக கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஷேர் ஆட்டோ, பைக் டாக்சிபோன்றவைதான் குறைந்த கட்டணத்தில் இருக்கின்றன. பல்லாண்டுகாலம் மீட்டர் பொருத்தாமல் ஆட்டோக்கள் இயங்குவது மட்டும் சரியா? அவர்கள் சொல்வதுதான் கட்டணமா? சிலகிலோ மீட்டருக்கே 150, 200 ரூபாய் என மனதில் படுவதை இவர்கள் கேட்பது ஏன்? ஆட்சிகள் மாறினாலும்.. ஆட்டோ கட்டணம் மட்டும் ஏன் பல ஆண்டுகளாக ஒழுங்குபடுத்தப்படவில்லை?
கேரளாவில் அரசாங்க App மூலம் நியாயமான கட்டணத்தில் ஆட்டோக்கள் இயங்குகின்றன. பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் மனசாட்சியுடன் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் சென்னை மற்றும் இதர தமிழக நகரங்களில் ஏன் முறையான கட்டணங்கள் இல்லை? ஏன் மீட்டர் இல்லை?
2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்... தமிழக ஆட்டோக்கள் மீட்டர் கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டுமென உத்தரவிட்டது. அது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் கலைப்பு செய்தியாகவும் வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் கூட இதுகுறித்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்நிலை தொடரும்?
பைக் டாக்சியும் இல்லாமல், நியாயமான ஆட்டோ கட்டணமும் இல்லாமல்.. எளிய மக்கள் அவதிப்படுவது ஏற்புடையதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications