இலங்கை தமிழர்களின் அரசியல் முகம்..விடுதலைப் புலிகளை தமிழர் பிரநிதிகளாக ஏற்றவர் இரா.சம்பந்தன்!
சென்னை: இலங்கை தமிழர்களின் அரசியல் முகமாக, தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்டவராக திகழ்ந்தவர் மறைந்த பெரியவர் இரா.சம்பந்தன். 1977-ம் ஆண்டு முதல் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதியாக உரத்து குரல் கொடுத்து வந்த பெரியவர் இரா.சம்பந்தன் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
1933-ம் ஆண்டு இலங்கை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த போது திருகோணமலையில் பிறந்தவர் இரா.சம்பந்தன். 1977-ம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு எம்பியானார். 1983-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் வெட்டி எறியப்பட்ட இனப்படுகொலைகளைக் கண்டித்து அப்போது தமிழ் எம்பிக்கள் அனைவரும் இலங்கை நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதனால் இரா.சம்பந்தன் எம்பி பதவியும் பறிபோனது.

1980களில் தனித் தமிழீழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் யுத்தம் நடத்தின. 1989-ல் இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர் இந்திய சார்பு ஆயுத குழுக்கள் ஆதரவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அப்போது இரா.சம்பந்தன் தோல்வியைத் தழுவினார்.
1990களில் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் கை ஓங்கியது. 2001-ல்
இரா.சம்பந்தனின் இலங்கை தமிழரசு, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்டவைகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவரானார் இரா.சம்பந்தன். 2001 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரா.சம்பந்தன் மீண்டும் வெற்றி பெற்று எம்பியானார்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஈழத் தமிழர்களின் பிரதிநிதி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்வதாக இரா.சம்பந்தன் அறிவித்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவை எதிர்கொண்டது. 2004, 2010, 2015, 2020 ஆகிய இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார் இரா.சம்பந்தன். 2015-ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர் பெரியவர் இரா.சம்பந்தன்.
இலங்கை தமிழர்களில் முதுபெரும் அரசியல் தலைவராக திகழ்ந்தவர்; பிரதார் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு செல்லும் போது தமிழர் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்துவது நடைமுறையாக இருந்து வந்தது. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருங்கிய நட்புறவில் இருந்து வந்தார் பெரியவர் இரா.சம்பந்தன். 91 வயதில் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இரா.சம்பந்தன் காலமானார். ஈழத் தமிழரின் முதுபெரும் அரசியல் முகம் ஒன்று விடை பெற்றுவிட்டது!












Click it and Unblock the Notifications