"கட்டிப்பிடித்து முத்தம் தரவில்லை.. அதான் அதிமுக.. ஆனால் ஸ்டாலின் செய்யலாமா? வரிந்து கட்டும் பாஜக
முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை, எச்.ராஜா விமர்சித்திருக்கிறார்கள்
சென்னை: பேரறிவாளனை முதுகில் தட்டி கட்டியணைத்த முதல்வர் ஸ்டாலின் மீது, தமிழக பாஜக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.. இதனால், காங்கிரசுக்கு ஒரு பக்கம் தர்மசங்கடம் என்பதைவிட, திமுக மீதும் அதிருப்தி கூடி வருகிறது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுவித்துள்ளது... இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
அதேபோல, எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார்.. வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்து வருகிறார்.
முதுகில் தட்டிய முதல்வர்
ஆனால், முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் ஸ்டாலின்... இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.. பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்... இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தி வருகிறது.
குஷ்பு
இந்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகை குஷ்பு, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று கேட்டிருந்தார்.. அதேபோல, தமாகாவின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜாவும், "அன்று எங்களுக்கு இருந்த உணர்வுக்கூட இன்று காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு இல்லையே.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல" என்றும் கேட்டிருந்தார்.
தீர்ப்பு
அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதை பற்றி சொன்னதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி, தனிச் சிறப்பு உடையதாக கருதி இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதனால், இந்த தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்கிறது... அதேசமயம், ஆனால் இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போதும் மறக்க கூடாது. ஒரு முன்னாள் பிரதமரை, தமிழ் மண்ணில் கொன்றிருக்கிறார்கள்.
அரசியல் சாசனம்
பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதங்களை பார்த்தால், ஏதோ நிரபராதியை விடுதலை செய்ததுபோன்று கொண்டாடுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும்போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக்கூடிய முதல்வராக இருப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.
குற்றவாளிகள்
பாஜகவை பொறுத்தவரை 7 பேரும் குற்றவாளிகள்தான்... சுப்ரீம்கோர்ட் ஆராய்ந்து சில காரணங்களால் விடுதலை செய்திருக்கிறதே தவிர, அவர்கள் கொண்டாடப்படக்கூடியவர்கள் கிடையாது.. வரலாற்றில் திமுக தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைத்திருக்கிறது. அவர்களை கொண்டாடி வருங்கால தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமாகிவிடக் கூடாது.
நடத்தை
7 பேர் விடுதலைக்கு அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றினாலும், விடுதலையான பிறகு அவரை அதிமுகவினர் யாரும் ஆரத்தழுவி, கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடவில்லை. இந்த தீர்ப்பின்படி, சிறையில் பேரறிவாளனின் நடத்தை, 2 முறை பரோலில் வந்த பிறகு அவரது நடத்தை, எந்த புகாருக்கும் இடமின்றி இருந்தது போன்ற காரணங்களால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கு பொருந்தாது" என்றார் அண்ணாமலை.
எச்.ராஜா
இதேபோல பாஜகவின் எச்.ராஜா இதை பற்றி கூறும்போது, "ஆனால் இன்று பேரறிவாளன் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதை போல முதலமைச்சர் பேரறிவாளனை அழைத்து கட்டியணைத்து குற்றத்திற்கு ஊக்கமளிக்கின்ற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவம், தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும்.. இது தமிழகத்தில் அரசியல் வன்முறையை மேலும் வளர்க்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இப்படி நாலாபக்கமிருந்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது.. இதற்கு திமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும், காரணமும், விளக்கமும் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.