நெட்டிசன் போட்ட மீமை காட்டமாக விமர்சித்த பிடிஆர்.. இடையில் புகுந்த அண்ணாமலை.. பளீர் கண்டனம்!
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் செய்த ட்வீட் ஒன்றுக்கு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை காட்டமாக பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். நிதி விவகாரங்களை கவனித்துக்கொள்வது, பட்ஜெட் தொடர்பான திட்டங்கள், ஆலோசனைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை தாண்டி அவ்வப்போது ட்வீட்டரில் காரசாரமான விவாதங்களிலும் ஈடுபடுவது வழக்கம்.
தனக்கு எதிராக யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது வேறு யாராவது கருத்து தெரிவித்து இருந்தால் அதற்கு பிடிஆர் காட்டமாக பதில் சொல்வது வழக்கம். இந்த நிலையில்தான் நெட்டிசன் ஒருவருக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

பிடிஆர்
பிடிஆர் தனது ட்வீட் ஒன்றில், நான் பொது வாழ்க்கைக்கு மிகவும் தாமதமாகவே வந்தேன். நான் என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் போதுமான சாதனைகளை நிகழ்த்திவிட்டு, குடும்பத்தை கவனித்துவிட்டு, அதன்பின் என்னுடைய அப்பா, தாத்தா போல பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டு மக்களுக்கு உதவ வந்தேன். முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

கிண்டல்
இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் பிடிஆர் ட்வீட்டை ஷேர் செய்து அவரை விமர்சனம் செய்து இருந்தார். நான் என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் போதுமான சாதனைகளை நிகழ்த்தினேன் என்று பிடிஆர் குறிப்பிட்டு இருந்ததை அந்த நெட்டிசன் விமர்சனம் செய்து இருந்தார். அமைச்சர் ஒருவரை இப்படி இவர் விமர்சனம் செய்ததை பலரும் கண்டித்து இருந்தனர். மீம் ஒன்றை வெளியிட்டு நெட்டிசன் செய்த இந்த விமர்சனத்திற்கு பிடிஆரும் காட்டமாக பதில் அளித்து இருந்தார்.

பிடிஆர் கோபம்
பிடிஆர் தனது பதிலில்.. நண்பா நான் உங்களை விட பெரியவன்.
உங்களுக்கு இரண்டு சவால் விடுகிறேன் (உங்களை போன்ற மோசமான கலாச்சரவாதிகளுக்கான சவால்)....
1) உங்களை விட 10 மடங்கு நல்ல வேலை மற்றும் தொழில் கொண்ட 100க்கும் அதிகமான நபர்களை நான் வழி நடத்தி இருக்கிறேன்.
2) நீங்கள் உங்கள் மொத்த வாழ்நாளில் பார்க்கும் வேலையை விட 100 மடங்கு பணிகளை நான் நடத்திக் காட்டி இருக்கிறேன்.
சவாலுக்கு தயாரா சிறியவரே?, என்று பிடிஆர் மிகவும் மோசமான அந்த மீமிற்கு பதில் அளித்து இருந்தார்.

அண்ணாமலை
இதற்கு தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் வைத்துள்ளார். அண்ணாமலை செய்துள்ள ட்வீட்டில், சாதாரண நபர் ஒருவருக்கு நிதி அமைச்சர் பதில் அளிக்கும் விதத்தை பாருங்கள்.. நாம் இருக்கும் பதவி என்பது கடந்த காலத்தை நினைத்து பெருமை கொள்வதற்கான கோபுரம் கிடையாது.. நாம் இருக்கும் பதவி என்பது பொறுப்பு நிறைந்தது. சாதாரண மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை நாம் வகிக்கும் பதவி நமக்கு வழங்கி இருக்கிறது. பிடிஆர் அதை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறன் என்று அண்ணாமலை ட்வீட்டில் விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications