அதிமுக வலுவாக இருக்கணும்தான்.. அதற்காக "அவர்கள்" வரவேண்டுமா?.. பாஜக அண்ணாமலை விளக்கம்!
சென்னை: அதிமுக சசிகலா தலைமையின் கீழ் இயங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதிமுக தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்துள்ளது. இதை காரணம் காட்டி கட்சியில் பெரும்பாலான தொண்டர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்துவிட்டனர்.
1 கோடி தொண்டர்களை கொண்ட கட்சியில் 50 லட்சம் பேர் மாற்றுக் கட்சிகளில் இணைந்துவிட்டதாக அதிமுகவினர் கொந்தளிக்கிறார்கள். கட்சியில் மீதமுள்ள 50 லட்சம் தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறார்கள்.

பழைய கம்பீரம்
அவ்வாறு அதிமுக தேயாமல் பழைய கம்பீரத்துடன் நிற்க வேண்டும் என்றால் அதற்கு ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமை விலகி ஒற்றை தலைமையின் கீழ் இந்த இயக்கம் இயங்க வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. அதிலும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்ட அதிமுக
தேனி மாவட்ட அதிமுகவினர் இவர்கள் இருவரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டனர். மேலும் ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா திருச்செந்தூர் சென்றிருந்த சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டசபை தேர்தல்
அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து கடந்த சட்டசபை தேர்தலின் போதே கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வந்த மத்திய அமைச்சர் ஒருவர் அதிமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் முடியாது என சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அதிமுக இரண்டாக பிரிந்து அது இணைந்ததும் பாஜகவால்தான் என சொல்லப்படுகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை
அது போல் அதிமுகவில் சசிகலா இணைப்பதிலும் பாஜகவின் பங்கு இருக்கிறது என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக அவர்கள் ஒன்றிணைய வேண்டுமா என்பதை ஓபிஎஸ்- இபிஎஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications