முதல்வரின் ஆசை இன்று நிறைவேறியது.. செந்தில் பாலாஜி ரெய்டுக்கு மத்தியில் அண்ணாமலை போட்ட பரபர ட்வீட்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் இன்று அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்ற நிலையில், "தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆசை இன்று நிறைவேறியது" என ட்வீட் செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வருகின்றன.

இதில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த தடையை உச்சநீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறை அலுவலகத்திலும் இன்று அமலாக்கத்துறை சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் விமர்சித்துள்ளனர். "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது" என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.
— K.Annamalai (@annamalai_k) June 13, 2023
தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்! pic.twitter.com/GyQeKv3Edw
இதற்கிடையே இந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு வீடியோவைப் பகிர்ந்து, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில், 2016ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்போது அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியது இடம்பெற்றுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications