சென்னையில் 13 சட்டசபை தொகுதிகளில் பாஜகவுக்கு 2வது இடம்.. தலைநகரிலேயே கோட்டைவிட்ட அதிமுக!
சென்னை : லோக்சபா தேர்தலில் சென்னையில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளில் பாஜக 2வது இடத்தை பிடித்திருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் அதிமுக மற்றும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்றாலும், கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தமாக 49,18,303 வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 23 தொகுதிகளில் 9 தொகுதிகளில் 2வது இடமும், 13 தொகுதிகளில் 3வது இடமும், ஒரு தொகுதியில் 4வது இடமும் பெற்றுள்ளது. இதன் மூலமாக பாஜகவின் வாக்கு சதவிகிதம் 11.24ஆக உள்ளது. இந்த ஒவ்வொரு தொகுதியிலும் பாஜக சட்டசபை தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் தெரிய வந்துள்ளது.
அதில் சென்னையில் மட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் உட்பட 13 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது. இதனால் அவ்வளவு எளிதாக முதல் இரு இடங்களை இரு கட்சிகளும் விட்டுக் கொடுக்காது.
ஆனால் இம்முறை பாஜக மாற்றியுள்ளது. தென்சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தியாகராய நகரில் திமுக - பாஜக இடையிலான வித்தியாசம் வெறும் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே தான் உள்ளது.
அதேபோல் மத்தியில் சென்னை லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பாக தேமுதிக போட்டியிட்டது. அதில் வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளில் பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் அதிமுகவினர் தலைநகரிலேயே கோட்டைவிட்டுள்ளதாக அக்கட்சியினர் விவாதித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications