வாழ்த்தா? கலாயா?.. எடுக்கலாமா? வேண்டாமா?.. கமலை பாடாய் படுத்தும் 'பழக்கூடை'
சென்னை: கமல்ஹாசன் நலம் பெறவேண்டி பழக் கூடை அனுப்பிய வானதி சீனிவாசன், கூடவே ஒரு தகவலையும் அனுப்பியதை இந்த தமிழ்ச் சமூகம் எப்படி மறந்தது என்பது தெரியவில்லை.
Recommended Video

நம்மாளுங்க, பாஜகவில் பல தலைவர்களை கேலி, கிண்டல் செய்து பார்த்திருப்போம். ஆனால், வானதி மீது மட்டும் எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும்.
காரணம், அவர் பெரிதாக எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார், விமர்சனங்களை கூட எப்போதும் இதமான மோடில் முன்வைப்பார். குரலில் கனிவு, முகத்தில் புன்னகை என்ற ஃபார்முலாவில் அதிகம் விமர்சிக்கப்படாத தமிழக பாஜக தலைவர்களில் ஒருவராக ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். இப்போதும் அப்படியொரு கனிவான... அதேசமயம் 'பயங்கரமான ஆளுயா' மோடில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

எதிரெதிர் வேட்பாளர்கள்
கோவை தெற்கு தொகுதி வேட்பாளரான கமல், பூ மார்க்கெட் பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டே மக்களை சந்திக்க, பலரும் அவருடன் செல்பி எடுக்க முண்டியடிக்க, சிலர் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலை மிதிக்க, அதனால் கால் வீங்க, இப்போது ஓய்வில் இருக்கிறார் கமல். ஆனால், கமலுக்கு காயம் ஏற்பட்டதை விட, அவர் உடல் நலம் பெற வேண்டி, தங்கள் தொகுதியின் மற்றொரு வேட்பாளர் வானதி அளித்த 'பழக்கூடை' பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது கோவை தெற்கு தொகுதி. இருவரும் ஒரே தொகுதியின் எதிர் எதிர் வேட்பாளர்கள் என்றாலும், கமல் நலம்பெற இவர் வேண்டுகிறாரே என்று வாக்கிங் செல்வோர் தொடங்கி முதல் வாட்ஸ் அப்-ல் குடும்பம் நடத்துவோர் வரை கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

நலம் பெற வாழ்த்து
வீடியோ மூலம் கமலுக்கு தனது வாழ்த்துகளை சொல்லி, பழக்கூடையை பாஜகவின் மாவட்டத் தலைவர் நந்தகுமாரிடம் கொடுத்து அனுப்பினார் வானதி. ஆனா அப்போ வச்சாரு பாருங்க பன்ச்.. அங்க தான் நிக்குறார். அவர் சொல்றார், 'கொங்கு மண்ணின் பாரம்பரியமே, "விருந்தினர்களை" உபசரிப்பதும், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், பழம், பிஸ்கட் வாங்கிக் கொண்டு வீட்டில் சென்று பார்ப்பது தான். அந்த வகையில், கமல்ஹாசன் அவர்கள் இந்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு "விருந்தினர்". அந்த விருந்தினர் நல்லபடியாக நலம் பெற வேண்டுகிறேன்' என்று பேசியிருக்கிறார்.

அதே சிரிப்பு
மேடம்.. செம மேடம் நீங்க... கண்ணுல அதே கனிவு, முகத்துல அதே சிரிப்பு.. ஆனா, போகுற போக்கில் 'தெற்கு தொகுதி' விருந்தினர் கமல்ஹாசன் என்று சொன்னது சான்ஸே இல்ல போங்க. அப்போ, பாஜக நம்மவரை வேட்பாளராகவே கன்ஸிடர் பண்ணலையோ என்ற சந்தேகம் நமக்கு எப்படி எழாமல் இருக்கும்?.

ஒரே வார்த்தையி
எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்று ஒரு மனிதன் கோவையிலேயே டெண்ட் அடித்து தங்கியிருக்கிறார். காலை, மாலை வாக்கிங் செல்வது, செல்பி எடுப்பது, பஸ்ஸில் பயணிப்பது, ஆட்டோவில் செல்வது, சிலம்பம் சுற்றுவது என்று சகலகலா பணிகளை மூச்சுமுட்ட செய்து உழைத்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல், 'விருந்தினர்' என்று ஒரே வார்த்தையில் ஆஃப் செய்வது நியாயமா மேடம்?

ஆரம்பிக்கலாங்களா?
ஆனால், கமல் இதற்கெல்லாம் அசருவதாக தெரியவில்லை. அவர் சுனாமியே வந்தாலும், கோவையில் ஜெயிக்காமல் திரும்பமாட்டார் போல.. பிரசார நேரம் போக அனைத்து நேரமும் ஏதாவது ஒரு சாலையில் நின்று கொண்டு மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நீங்கள் கோவைக்காரராக இருந்தால், குறிப்பாக தெற்கு தொகுதியில் வசிப்பவராக இருந்தால், சும்மா வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே சொல்லுங்களேன்.. உங்கள் பின்னால் கூட ஒரு குரல், 'ஆரம்பிக்கலாங்களா?' என்று கேட்டாலும் கேட்கும்.

உலக நாயகனாச்சே?
என்னதான் நாம் ஜாலியாக பேசினாலும், கமல்ஹாசனை அத்தனை எளிதாகவா பாஜக எடை போட்டிருக்கும் என்று கேள்வியும் நம்மில் எழாமல் இல்லை. 'உலக நாயகன்'... இவரைத் தெரியாத தமிழரே இருக்க முடியாது.. நடிப்பின் உச்சம்.. நகரப்பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கான ஆள்.. என்று இத்தனை அம்சங்களையும் பாஜக அவ்வளவு சாதாரணமாக எடை போட்டிருக்குமா என்ன?
பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications