பெட்ரோல் குண்டு வீச்சு.. பறந்த ஆர்டர்! தயாராகும் தாமரையின் முக்கிய தலைகள்.. எல்லாம் இதுக்குதான்
சென்னை: கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து மாநில தலைவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பாஜக பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் தாங்களே ஆள் வைத்து வெடிகுண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றன. தற்போதைய சம்பவங்களும் இதேபோன்று இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா! தமிழக அரசு கும்பகர்ண தூக்கத்தை கைவிட வேண்டும் -அதிமுக
பெட்ரோல் குண்டு வீச்சு
கடந்த 2 தினங்களாக மதுரை, கோவை மற்றும் கன்னியாகுமரி என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆய்வு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "இது போன்ற சம்பவங்களை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று கூறியிருந்தது தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய எம்எல்ஏக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் பாஜக வெளியிட்டுள்ளது.
அறிக்கை
அறிக்கையில் கூறியுள்ளதாவது, "தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளில் உள்ள தலைவர்கள், தொண்டர்களின் அலுவலகங்கள், வீடுகள், ஆகியவற்றில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் குண்டுகள் வீசுதல், தீ வைத்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை அந்தந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாநில தலைமையிடம் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக பாஜக சார்பில் எம்எல்ஏக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கு
அதன்படி கன்னியாகுமரி மற்றும் மதுரை பெருங்கோட்டம் பகுதியில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் மாநில து.தலைவர் சசிகலா புஷ்பா, மா.பொ.செ பொன்.பாலகணபதி, கூட்டுறவு பிரிவு தலைவர் மாணிக்கம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோல, திருச்சி, விழுப்புரம் மற்றும் சென்னை பெருங்கோட்டம் பகுதியில், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில், மா.செ சம்பத், மா.செ.மீனாட்சி, ஆதி திராவிடர் அணி தலைவர் தடா பெரியாசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொள்வார்கள்.
வடக்கு
வேலூர் மற்றும் சேலம் பெருங்கோட்டங்களில், எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி தலைமையில், மா.பொ.செ.கார்த்தியாயினி, மா.செய்தி தொடர்பாளர் நரசிம்மன், சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் ஆகியோரும், இறுதியாக கோவை பெருங்கோட்டத்தில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில், மா.து.த இராமலிங்கம், மா.பொ. எஸ்ஆர். சேகர், விவசாய அணி தலைவர் நாகராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொள்வார்கள்." என அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.