பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் அண்ணாமலைக்காக பாஜக கேட்டு வாங்கிய ராஜ்யசபா இடம் தற்போது விட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முனைப்பில் பாஜக இந்த மாற்றத்தை செய்தது. அண்ணாமலையின் பாஜக மாநில தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியடைந்தார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பிரசாரம் மட்டுமே செய்தார். இந்நிலையில் தான் கடந்த 1ம் தேதி டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து தனது ராஜினாமா முடிவை அறிவித்தார்.
பாஜக மேலிட தலைவர்கள் அண்ணாமலையை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அண்ணாமலை சமாதானம் அடையவில்லை. இந்நிலையில் தான் இன்று மதியம் 12 மணிக்கு அண்ணாமலை சமூக வலைதளங்களில் நேரலையில் உரையாற்ற உள்ளார். இந்த சமயத்தில் பாஜகவில் இருந்து விலகியதையும், புதிய கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பையும் அண்ணாமலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக அண்ணாமலையை பாஜக மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தபோது ராஜ்யசபா பதவி வழங்குவதாக கூறினர். இதற்காக ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்குவதாக தெரிவித்தனர். ஆந்திராவில் தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடுவின தெலுங்குதேசம், துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் 4 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அண்ணாமலைக்காக ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா இடத்தை சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டு பாஜக பெற்றது. அண்ணாமலைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள 3 இடங்களில் தெலுங்குதேசம் 2 இடங்களிலும், ஒன்றில் பவன் கல்யாணின் ஜனசேனா வேட்பாளரும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதால் அவருக்காக கோரப்பட்ட ராஜ்யசபா எம்பி இடம் விட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தெலுங்கு தேசம் கட்சியே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் உள்ள 4 ராஜ்யசபா இடங்களில் 3ல் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர்களும், ஒன்றில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வேட்பாளரும் போட்டியிட உள்ளனர். ஆந்திராவில் இருந்து பாஜக போட்டியிடவில்லை என் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகும் அறிவிப்பில் அண்ணாமலை பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications