”தமிழ்நாட்டில் இரட்டை வேடம் போடும் பாஜகவை அம்பலப்படுத்துவோம்” - அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு ஆபத்து என்றும், பாஜகவின் இரட்டை நிலைபாட்டை மக்களுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் மூத்த நிர்வாகி பொன்னையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, பொன்னையன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக ஆலோசனை
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை, ஆளும் திமுக அரசுக்கு எதிர்வினையாற்றுவது எப்படி?, கூட்டணி கட்சியான பாஜக வளர்ந்து வரும் சூழலில் அதிமுக தனது இருப்பை தக்க வைப்பது எப்படி? சமூக வலைதளங்களில் திறன்பட செயலாற்றுவது, அதிமுகவின் எதிர்கால செயல்பாடுகள் என பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாஜகவின் வளர்ச்சி ஆபத்து
இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டார். அப்போது தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியால் அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவால்களை விளக்கினார். பாஜகவின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கும், அதிமுகவுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று அவர் கூறினார்.

பாஜகவின் இரட்டை நிலைபாடு
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. மாநில விவகாரங்களில் பாஜக இரட்டை நிலைபாட்டை எடுக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம். கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும்' என அம்மாநில பாஜக கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும்' என்கிறது.

பாஜகவை அம்பலப்படுத்துவோம்
அதிமுக பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரச்சாரத்தை மறைமுகமாக பாஜக செய்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இதை செய்திட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications