மாப்பிள்ளையுடன் இவருக்கு என்ன பேச்சு! கண் சிவந்த டெல்லி! பதற்றத்தில் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியது பாஜக மேலிடத்துக்கு கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ரவீந்தரநாத் எம்.பி.யை அதிமுகவை சேர்ந்தவராக அங்கீகரிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பை ஓபிஎஸ் மகன்களே ரசிக்கவில்லை என்பது தான் கூடுதல் தகவல்.
இதனிடையே சபரீசனுடனான சந்திப்பால் டெல்லி கண் சிவந்ததை அறிந்த ஓ.பன்னீர்செல்வம், பதற்றத்தில் தான் இருந்து வருகிறாராம்.

கடந்த 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் -மும்பை அணி இடையேயான கிரிக்கெட் போட்டியை தனது பேரன்களுடன் பார்க்க வந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் மருமகன் சபரீசனை அங்கு சந்தித்து பேசினார்.
இந்த புகைப்படங்களை சபரீசன் தரப்பு வெளியிட்ட நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, திமுக, அதிமுகவினர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியது.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் பன்னீருக்கு எதிர்ப்பை அதிகரிக்கும் வகையில் பார்த்தீர்களா ஓ.பன்னீர்செல்வத்தின் திமுக விசுவாசத்தை என எடப்பாடி பழனிசாமி தரப்பு அதை ஊதி பெரிதாக்கியது.
இதனால் அப்செட் ஆன ஓ.பன்னீர்செல்வம் யதார்த்தமாக சந்தித்தை வைத்து சபரீசன் டீம் இப்படி அரசியல் செய்துவிட்டதே என நெருக்கமானவர்களிடம் குமுறியிருக்கிறார்.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மீதிருந்த கொஞ்சநஞ்ச பரிதாபமும், மரியாதையும் பாஜக மேலிடத்துக்கு இந்த சந்திப்புக்கு பிறகு இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பதற்றத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், சபரீசனுடனான சந்திப்பு குறித்து எப்படி விளக்கம் அளிப்பது, யார் மூலம் எடுத்துக் கூறுவது எனத் தெரியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications