சண்டை சந்தை வரை வந்துருச்சு.. நயினாரை போட்டுப் பொளக்கும் அண்ணாமலை டீம்! அதிரடியாக பாய்ந்த ஆக்ஷன்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்த நிலையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக திரும்பி உள்ளனர் அண்ணாமலை ஆதரவாளர்கள். இந்த நிலையில் மாநில தலைமையை விமர்சித்ததாக பாஜக கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவர் உள்ளிட்ட எட்டு நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறிய பிரசாத் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் புதிய உள்கட்சிப் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான அணிக்கு எதிராக, முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் பொதுவெளியில் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.

இதனால் தமிழக பாஜகவில் மீண்டும் தலைமை மாற்றம் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, உதகை தொகுதியைத் தவிர மற்ற இடங்களில் தோல்வியடைந்தது. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் சாத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
தமிழக பாஜக தோல்வி
2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 11 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்த பாஜக, இந்த முறை கூட்டணியிலிருந்தும் 3 சதவீத வாக்கு வங்கிக்கு சரிந்திருப்பது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், பாஜக கூட்டுறவு பிரிவு தலைவரான மகா சுசீந்திரன் வெளியிட்டதாக கூறப்படும் "சாணக்கியர் சறுக்கினாரோ?" என்ற அறிக்கை கட்சிக்குள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நயினார் நாகேந்திரன்
அதில், அண்ணாமலை தலைமையில் வளர்ந்த பாஜக, தற்போதைய தலைமையில் பலவீனமடைந்துவிட்டதாகவும், திராவிடக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக, நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி, எல்.முருகன் ஆகியோர் பொறுப்பில் இருந்து விலகுவதாக போலி கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாஜக உட்கட்சி மோதல்
இதுதொடர்பாக பாஜக போலீசில் புகார் அளித்திருந்தாலும், அந்த விவகாரம் கட்சிக்குள் நிலவும் மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே, மாநில தலைமையை விமர்சித்ததாக கூறி கன்னியாகுமரி மாவட்ட துணைத்தலைவர் உள்ளிட்ட 8 நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த செய்தித் தொடர்பாளர் பிரசாத் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை ஆதரவாளர்கள்
அண்ணாமலை தலைமையில் கட்சி தனித்த அடையாளத்துடன் வளர்ந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் தலைமையில், பாஜக அதிமுகவின் துணை அமைப்பைப் போல செயல்பட்டதாக அதிருப்தி நிலவுகிறது. "அண்ணாமலை எதிர்ப்பு" என்ற ஒரே காரணத்துக்காக சில மூத்த தலைவர்கள் இணைந்து செயல்பட்டதால், அடித்தள தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாஜக தலைமை மாற்றம்
இதனால், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது. தமிழக பாஜக தலைமை மாற்றம் தொடர்பாக டெல்லி மேலிடம் விரைவில் முக்கிய முடிவு எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
விஜய் அலை
இது ஒருபுறம் இருக்க இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை போட்டியிடவில்லை. கோவையில் தனக்கு ஒரு தொகுதி கேட்ட நிலையில் அதனை ஒதுக்க நயினார் நாகேந்திரன் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் விஜய் அலை குறித்து முன்னரே கணித்த அண்ணாமலை போட்டியிட்டாலும் தோல்விதான் மிஞ்சும் என்பதால் தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை இது அண்ணாமலையின் தோல்வி பயத்தை காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர் நாகேந்திரனின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications