மாஸ்டர்மைன்ட்.. அந்த குரூப்பை அப்படியே கொண்டு வந்த அமித் ஷா.. எல்லாம் முருகனுக்காக.. இதுதான் சங்கதி!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. மற்ற இடங்களில் தோல்வி அடைந்தால் கூட தாராபுரத்தில் வென்றுவிட வேண்டும் என்று பாஜக உறுதியாக உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 20 இடங்களில் போட்டியிடுகிறது. 40 இடங்களில் போட்டியிட திட்டமிட்ட பாஜக 20 இடங்கள் போதும் என்று விட்டுக்கொடுத்துவிட்டது. பாஜக 20 இடங்களில் போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பு என்னவோ 3 இடங்களுக்கும் குறைவாகவே உள்ளது.
பாஜக வேட்பாளர்களில் 3 பேர் மட்டும்தான் அதிக வாக்குகளை பெறுவார்கள் என்று நம்பிக்கை அளித்துள்ளனர். ஆனால் அதுவும் கூட நெக் டூ நெக்தான். இதில் ஒரு தொகுதியைத்தான் பாஜக அதிகம் நம்புகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படி
பாஜக நம்பும் 3 தொகுதிகள் பின் வருமாறு.
- கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
- ஆயிரம் விளக்கு - குஷ்பு
- தாராபுரம் தனி - எல்முருகன்
இந்த தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுவிடும் என்றெல்லாம் நம்பவில்லையாம். ஆனால் முடிந்த அளவிற்கு அதிக வாக்குகளை பெற்று வாக்கு சதவிகிதத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறதாம் . தமிழகத்தில் வாக்கு வங்கியை உயர்த்தும் முடிவில் இந்த 3 தொகுதிகள் மீது குறி வைத்துள்ளது.
வெற்றி
அதிலும் தாராபுரம் தொகுதியில் கொஞ்சம் நன்றாக வேலை பார்த்தால் வெற்றிபெறுவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக பாஜக நினைக்கிறது. தாராபுரத்தில் முருகன் போட்டியிடுகிறார். இங்கு தலித் வாக்குகள் அதிகம் உள்ளது. இது தனி தொகுதி என்பதால் முருகன் இந்த தொகுதியை அதிமுகவிடம் கேட்டு வாங்கி உள்ளார்.
வாய்ப்பு
பாஜகவிற்கு வெற்றிவாய்ப்பு உள்ள ஒரே தொகுதி இதுதான் என்று மேலிடத்திற்கு உத்தரவு சென்றுள்ளதாம். முழு மூச்சாக வேலை பார்த்தால் கண்டிப்பாக சட்டசபைக்கு முருகன் செல்வதை தடுக்கவே முடியாது என்று கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த சில கருத்து கணிப்புகளில் கூட திமுகவை விட அதிமுக கூட்டணி இங்கு 1% வாக்குகளை கூடுதலாக எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video
போட்டி
இந்த தொகுதியில் தற்போது கடும் போட்டிதான் நிலவுகிறது. ஆனால் அதிக நிர்வாகிகள் வேலை பார்த்தால் கண்டிப்பாக பாஜக வெல்லும் என்று முருகன் நம்புகிறார். இங்கு திமுக சார்பாக கயல்விழி போட்டியிடுக்கிறார். இவரும் கொஞ்சம் பிரபலமான வேட்பாளர் என்றாலும் பெரிய அளவில் இவருக்காக பிரச்சாரங்கள் நடக்கவில்லை. பெரிய அளவில் இவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் நடக்கவில்லை.
முருகன்
திமுக ஏனோ இங்கு சுணக்கம் காட்டியுள்ளது. ஆனால் முருகனுக்கு ஆதரவாக கர்நாடகாவில் இருந்தும், டெல்லியில் இருந்தும் பாஜக நிர்வாகிகள் நேரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பெரிய டீமையே முருகன் தாராபுரத்திற்கு கொண்டு வந்துள்ளார். அமித் ஷாவும் தான் அதிகம் நம்பும் சிலரை இங்கு தேர்தல் பணிகள் செய்ய அனுப்பி வைத்துள்ளாராம்.
தேர்தல்
வானதிக்கு எப்படி வடஇந்திய பெண்கள் கோவை தெற்கில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்களோ அதேபோல்தான் இங்கும் பல தேசிய மாஸ்டார்மைண்ட்கள் பிரச்சார யுக்திகளை வகுத்து வருகிறார்கள். முருகனின் வெற்றியை மானப்பிரச்சனையாக பாஜக பார்க்கிறது. இவரை எப்படியாவது சட்டசபைக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று!