திமுகவின் அதே ஃபார்முலா..7 மணி வரை காத்திருந்தேன்! விஜய் ’அதை’ செய்யவில்லை..பஞ்சாயத்தை தொடங்கிய பாஜக
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நாளை தனது கட்சி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பதையும், மாநாட்டு தேதியையும் அறிவிக்க இருக்கிறார். இந்நிலையில் திமுக செய்த வேலையை தவெக விஜய் செய்திருப்பதாகவும், பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கிறது பாஜக. இதுதொடர்பாக பிரச்சினையை ஆரம்பித்தவர் பாஜக வினோஜ் செல்வம்..
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவானது இன்று உலகெங்கும் வசிக்கும் இந்து மக்களால் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுரத்தியே விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்ததாக இந்து மக்களின் நம்பிக்கை. அந்த வகையில் இன்று வழக்கமான உற்சாகத்தோடு விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
வீடுகளிலும் பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. கால் அடி முதல் 70 அடி வரை பல்வேறு உயரங்களில் இந்தியா முழுவதும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தேசிய தலைவர்களும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், பாஜகவினர் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வந்த மகிழ்ச்சி செய்தியால் உற்சாகத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை இதனை தவெக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், மாநாடு தொடர்பான அறிவிப்பும் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நாளன்று விஜய்யை வைத்து பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளது பாஜக. அதாவது விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை என ட்வீட் செய்துள்ளார் பாஜக பிரமுகரான வினோஜ் பி செல்வம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," இந்த ட்வீட்டை போடுவதற்காக இரவு ஏழு மணி வரை காத்திருந்தேன்.. புதிய கட்சி தொடங்கி இருக்கும் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் சொல்லவில்லை.. சிறுபான்மையினர் மக்களை குஷிப்படுத்தும் அதே பழைய தந்திரத்தை விஜய் கடை பிடித்து இருக்கிறார். திமுகவை காப்பியடிக்கும் அளவுக்கு விஜய் தரம் தாழ்ந்து போயிருக்கிறார்.. மக்கள் சிந்திக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

அதாவது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் கடந்த சில நாட்களாக ட்விட்டர் அரசியல் மட்டுமே செய்து வந்தார். பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் தற்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டி இருக்கிறது. இதே குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக திமுக மீதும் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வினோஜ் பி செல்வத்தின் பதிவுக்கு பாஜகவினர் கமெண்ட் செக்ஷனில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் அவருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ விஜய்-ஐ ஏற்கனவே "ஜோசப் விஜய்" என வம்பிழுத்த பாஜக தற்போது மீண்டும் மத அரசியலை வைத்து விமர்சிக்க ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications