கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜக வக்கீல்.. பரபர ட்வீட்.. அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர் ரகுபதி!
சென்னை: பாஜக அலுவலகம் முன்பு இதே போல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருக்கும் கருக்கா வினோத்தை, பாஜக வழக்கறிஞரே ஜாமீனில் எடுத்துள்ளது சந்தேகத்தை கிளப்புவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரகுபதி.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு விவகாரம்: முன்னதாக, போலீசார் கருக்கா வினோத்திடம் மேற்கொண்ட விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததாலும், நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டு வீசியதாக தெரியவந்தது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தின் குடும்பத்தாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக திமுக, பாஜக தரப்பில் மாறி மாறி குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை - ஆளுநர் மாளிகை தரப்பு இடையேயும் கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன. காவல்துறை இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது.

ராஜ் பவன் குற்றச்சாட்டு: இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டு தாக்குதல் தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகார் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை ஆளுநர் மாளிகை மீதான தாக்குதலை ஒரு சிறிய அளவிலான தாக்குதலாக நீர்த்துப்போக செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
நள்ளிரவில் நீதிபதியை எழுப்பி, கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைத்ததன் மூலம், விரிவான விசாரணை தடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளது. ஒரு நியாமான விசாரணை தொடங்கும் முன்பே வழக்கு முடிக்கப்பட்டுவிட்டதாவும் காட்டமாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது
அமைச்சர் ரகுபதி பரபர ட்வீட்: இந்நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு குற்றம்சாட்டி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அமைச்சர் ரகுபதியின் பதிவில், "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
"2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய அதே நபர் தான் இன்றும் ராஜ்பவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தொடர் தாக்குதல்கள், இந்தத் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது." என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications