திடீர் சூறைக்காற்று.. வருங்கால மனைவியுடன் சுற்றுலா போன இளைஞரின் உயிரை பறித்த செல்பி - 400 அடி பள்ளம்
மும்பை: நிச்சயிக்கப்பட்ட திருமணம்... இன்னும் நான்கே மாதங்களில் உதய்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடக்கவிருந்த கல்யாண கொண்டாட்டம். திருமணத்துக்கு முன்பாகவே நிச்சயம் செய்த பெண்ணின் பிறந்தநாளையொட்டி அவருடன் சுற்றுலா சென்ற 26 வயது நிரம்பிய இளைஞர் கோட்டை மீது ஏறி 'செல்பி' எடுக்க முயன்று வருங்கால மனைவியின் கண் முன்னே 400 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
வயது 26 தான். செல்வ செழிப்பான குடும்பத்தில் வளர்ந்த செல்லப்பிள்ளை அவர். என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கி கொடுக்கும் குடும்பத்தினர். தந்தை நடத்தும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பு.

ஆசைப்பட்டபடியே மனதுக்கு பிடித்த பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்னும் 4 மாதம் தான். மனம் கவர்ந்த மங்கைக்கு மாங்கல்யம் கொடுத்து திருமண உறவுக்குள் 'என்ட்ரி' கொடுக்க தயாராக இருந்தார் அந்த இளைஞர்.
தன்னை கணவனாக ஏற்க தயாரான பெண்ணின் பிறந்தநாளையொட்டி நண்பர்களுடன் சென்ற இன்ப சுற்றுலா துயரத்தில் முடிந்துள்ளது. எதிர்பாராத விதமாக வீசிய சூறைக்காற்றும், ஆபத்தான 'செல்பி' மோகமும் வருங்கால மனைவியின் கண்முன்னே அவரது உயிரை பறித்துள்ளது. அப்படி என்ன நடந்தது? திருமண வீடு துக்க வீடாக மாறியது எப்படி? என்பது பற்றிய துயர சம்பவம் வருமாறு:
மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் கேதன் விஷால் அகர்வால். பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
திருமண ஏற்பாடுகள் களைகட்டியது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருகுடும்பத்தினரும் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இன்னும் சரியாக நான்கு மாதங்களே திருமணத்துக்கு இருந்தது. திருமணக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தார் கேதன்.
இதற்கிடையே தான் தனது வருங்கால மனைவியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து லோஹகாட் கோட்டைக்கு சுற்றுலா சென்றார் கேதன். கேதன், அவரது வருங்கால மனைவி மற்றும் 2 நண்பர்கள் என்று மொத்தம் 4 பேர் சென்றனர். நேற்று முன்தினம் காலையில் லோஹகாட் கோட்டைக்கு 4 பேரும் சென்று பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.
அப்போது கோட்டையின் ஒரு உயரமான பகுதியில் நின்று கேதன் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியது. அதில் நிலைத்தடுமாறிய கேதன் கண்இமைக்கும் நொடியில் 400 அடி பள்ளத்தில் விழுந்தார். தன்னுடன் கைபிடித்து வாழப்போகும் கணவர், தன் கண் முன்னாலேயே அதலபாதாளத்தில் விழுந்ததை கண்டு அவரது வருங்கால மனைவி அலறினார். கதறி அழுதபடி கேதன் விழுந்த பள்ளத்தை நோக்கி ஓடினார்.
உடனடியாக அங்கிருந்தவர் அவரை பிடித்து ஆறுதல் கூறினர். போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்கள், 'சிவதுர்க் மித்ரா' மீட்புக் குழுவினரும் சுமார் மூன்று மணி நேரம் போராடி கேதன் விழுந்து கிடந்த இடத்தை கண்டுபிடித்தனர். அப்போது அவர் இறந்திருந்தார். உடல் மீட்கப்பட்டது. செங்குத்தான மலைப்பகுதி மற்றும் அடர்ந்த செடி கொடிகளுக்கு இடையே அவரது உடலை மீட்பது பெரும் சவாலாக இருந்தது. சவால்களை கடந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
நவம்பர் மாதம் திருமணம்... உதய்பூர் அரண்மனையில் ராஜ மரியாதையுடன் மகனை மணமேடை ஏற்ற வேண்டும்" என்று ஆசைப்பட்ட அந்தப் பெற்றோரின் கனவுகள் இப்போது சுடுகாட்டில் சாம்பலாகிவிட்டன. அதேபோல் இல்லறத்தில் இணைந்து இனிமையாக வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற நினைத்த அந்த பெண்ணும் தனது வருங்கால கணவனை இழந்து நிற்கிறார்.
இன்னும் சில மாதங்களில் திருமண விழாவாக களைகட்ட வேண்டிய இல்லங்கள் தறே்பாது மரண ஓலரத்தால் நிறைந்துள்ளது. ஒரு செல்பி எடுக்கும்போது காட்டும் சிறு கவனக்குறைவு குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியைம் எப்படி சிதைக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த துயர சம்பவம் உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொருவரும் சுற்றுலா செல்லும்போது மிகுந்த கவனத்துடன் போட்டோ எடுக்க வேண்டும். ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு நிகழும் அசம்பாவிதங்கள் என்பது உங்களோடு முடிவதில்லை. உங்களின் குடும்பத்தையும் மொத்தமாக கலங்க வைத்துவிடும்.. உஷாரா இருங்க மக்களே...!












Click it and Unblock the Notifications