சென்னையில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை: தப்பி ஓடிய பாஜக பிரமுகர் ஆந்திராவில் கைது!
சென்னை: சென்னையில் தாய்-மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தலைமறைவான பா.ஜ.க பிரமுகரை ஆந்திராவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(55).
பா.ஜ.க.வை சேர்ந்த இவர் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் பா.ஜ.க பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு தன்னிடம் பார்த்தசாரதி தவறாக நடந்து கொண்டதாக சித்ரா கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட பார்த்தசாரதி ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்பு அவர் தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணை சீண்ட தொடங்கினார்.

பெண் புகார்
இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். அதில் வழக்கறிஞர் பார்த்தசாரதி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தேன். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளி வந்திருந்துள்ளார்.

மீண்டும் பாலியல் தொல்லை
தற்போது தனக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதோடு மட்டுமல்லாமல் தனது மகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். நாங்கள் வீட்டு வாசலில் இருந்தால் தகாத வார்த்தைகளால் திட்டி, உங்கள் மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல் விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். நானும் என் மகள்களும் எங்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் போதெல்லாம் அவர் வீட்டு ஜன்னலில் இருந்து போட்டோ எடுத்து தொந்தரவு செய்கிறார்.

முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு
இது தொடர்பாக என் கணவர் தட்டிகேட்கும் போதெல்லாம் அவரையும் கொலை செய்து விடுவதாக பார்த்தசாரதி மிரட்டுகிறார். எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் அந்த பெண் தெரிவித்திருந்தார். பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அளித்திருந்தார்.

போக்ஸோ சட்டம் பாய்ந்தது
இது தொடர்பாக பார்த்தசாரதி மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பார்த்தசாரதி மீதான குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்தனர்
தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த பார்த்தசாரதி போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து தப்பி ஓடினார். தலைமறைவான பார்த்தசாரதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆந்திரா சென்ற போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications