விஜய்ய ஆள விடுங்க..6 மாசம் டைம் கொடுங்க! திடீரென சப்போர்ட்டுக்கு வந்த பாஜக பிரபலம்! மோடிக்கு லெட்டர்
சென்னை: தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்கும் வகையில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய தலைவர்கள் இதுகுறித்து பேசி, தமிழக வெற்றி கழகம் சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்று முதல் கட்டமாக ஒரு ஆறு மாத காலத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் எந்தவித அழுத்தமும் நிபந்தனையும் இன்றி ஆதரவளிக்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரது அறிக்கையில்," தமிழக மக்களின் மாபெரும் ஆதரவுடன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றி பெற்றுள்ள நடிகர் விஜய், அரசியல்வாதியாக ஒரு சிறந்த நிர்வாகியாக செயல்பட குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசத்தை தமிழக அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும்.

அதன்பின் தவெக ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப மக்கள் நலனுக்கு ஏற்ப முடிவு எடுத்து தமிழகத்தில் நாகரிக அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தில் மக்களையும் ஜனநாயகத்தையும் காக்கும் வகையில், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் ஒருங்கிணைந்து, போட்டியிட்ட போதும், தமிழகத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி தமிழ் தமிழர் தமிழகத்தின் நலனுக்காக சேவை செய்த தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் அரசியல் அனுபவம் இல்லாது இருந்தாலும், திரைப்பட நடிகராக அவர் மீதுள்ள தீராத விருப்பத்தின் காரணமாக, கூட்டணி இன்றி போட்டியிட்ட நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தமிழகத்தை ஆளும் பொறுப்பை தமிழக மக்கள் அளித்துள்ளனர்.
தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தின் 108 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்த தமிழக மக்களின் எண்ணத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில், தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும், எம்எல்ஏக்களை விலை பேசும் அரசியல் குதிரை பேரத்திற்கு தமிழக அரசியலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகம் எந்த வித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்க, அவர்கள் விரும்பினால் மட்டும் கூட்டணி ஆட்சி அமைக்க, குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு ஒன்றிணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை தமிழக மக்களில் ஒருவராக நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளராக இது குறித்து பாரதப் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாஜக தலைவர் நித்தின் நபினுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்கும் வகையில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேசிய தலைவர்கள் இதுகுறித்து பேசி, தமிழக வெற்றி கழகம் சுய விருப்பத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும்.
பிரிவினைவாத சக்திகள் இடம் இருந்து, சுயநல ஊழல் கட்சிகளிடமிருந்து, எந்தவித அழுத்தமும் இல்லாமல், தனித்துவத்துடன் சிறந்த முறையில் தங்கள் பங்கை தமிழக வளர்ச்சிக்கு அளிக்க, அரசியல் வேறுபாடுகளை கடந்து மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை மிகச் சிறப்பாக தமிழகத்தில் செயல்படுத்த இந்த நேரத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு ஆதரவளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்.
மேலும், அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்தத் தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக தமிழகத்தில் பாஜக தான் எங்கள் எதிரி, தவெக எங்கள் நண்பர் என்று பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து, அரசியல் பிழைப்பு நடத்தி வரும் திருமாவளவன், பாட்டாளி மக்களின் வியர்வையை, ரத்தத்தை உறிஞ்சி ஏமாற்றிஅரசியல் செய்யும் போலி கம்யூனிஸ்டுகளும் மற்றும் தமிழக மக்கள் கூட்டணி அரசை தான் விரும்புகிறார்கள் என்று, கூட்டி கொடுத்து காட்டிக்கொடுக்கும் போலி அரசியல்வாதிகளின் எம்எல்ஏக்களை விலை பேசும் கீர்த்தனமான குதிரை பேர அரசியலை ஊக்கப்படுத்தி தமிழக மக்கள் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அளித்த வாய்ப்பை தட்டிப் பறித்து, ஆட்சி கலைந்து விடும் என்று அழுத்தம் கொடுத்து மக்களின் தீர்ப்பை, தமிழக வாக்காளர்களின் எண்ணத்தை சிதைக்க கூடாது.
நடந்து முடிந்துள்ள 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் பிரதானமான எண்ணமாக இருந்தது. தமிழக மக்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக, பாஜக தனித்தனியாகவும் இணைந்தும் கடும் போராட்டங்களை நடத்தியது.
தமிழகத்தில் கொலை,கொள்ளை கள்ளச்சாராய சாவுகள், போதை கலாச்சாரம், கொடூரமான பாலியல் குற்றங்கள் என திமுக அரசின் தீய செயல்களை தட்டி கேட்ட சுட்டிக் காட்டிய பத்திரிகையாளர்கள் அரசியல் தலைவர்கள் மீது கொலை வெறி தாக்குதல், அரசியல் படுகொலையில் காவல்துறையின் வன்முறை, அடக்குமுறை என அனைத்து அலங்கோலங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணி வெளிச்சம் போட்டு காட்டியது.
ஆனால், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தனித்தனியாக போட்டியிட்டதால் திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனாலும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 10 ஆயிரத்து 500 வாக்குகள் திமுக குறைவாக பெறக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஏற்படும் என்பதை பாஜக பறைசாற்றியது.
திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்று மக்கள் முடிவு எடுத்த நிலையில், முக்கியமான சூழ்நிலையில் தமிழக வெற்றி கழகத்தை நடிகர் விஜய் துவக்கினார். நடிகர் விஜய்யை பாஜக வாழ்த்தி வரவேற்றது. பாதுகாத்தது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திலும் பல்வேறு சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும், பாவ மூட்டைகளும் நடிகர் விஜய் மேல் சுமத்தப்பட்ட பொழுது பாஜக நடுநிலையோடு செயல்பட்டு விஜய்யின் அரசியலுக்கு அரணாக நின்றது. நீதிமன்ற தீர்ப்பின்படி சிபிஐ விசாரணை நடு நிலைமையோடு நடைபெறுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் இந்தியாவின் புதிய அடையாளமாக, பணம் அதிகாரம் மட்டுமே தேர்தலில் வெற்றியை தரும் என்ற மமதையுடன் செயல்பட்டு வந்த ஆணவ அதிகார வர்க்கத்திற்கு சாட்டையடி கொடுக்கும் வகையில், எளிமையும் நேர்மையும் நம்பிக்கையும் மக்களுக்கு சேவை செய்யும் நல்லெண்ணமும் இருந்தால் தமிழக மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்ற புதிய நெறியை தமிழக வாக்காளர்கள் உலகிற்கு உணர்த்தி இருக்கிறார்கள். .
இந்த மகத்தான சூழ்நிலையை உருவாக்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தின் ஜனநாயகத் தூணாக வருங்காலத்தில் போற்றப்படும் வகையில் ஒரு நேர்மறை அரசியலுக்கு வித்திட்டு உள்ளார். திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் சரியாக அளவீடு செய்தால் ஏறத்தாழ 20 லட்சம் கோடி ரூபாய் கனிம வள கொள்ளை நடந்துள்ளது. கனிமக் கொள்ளையை தடுத்து நிறுத்தி அரசே கனிமங்களை முறையாக வியாபாரம் செய்தால் அனைத்து துறை ஊழல்களையும் கட்டுப்படுத்தினால், ஊழல் இல்லாத ஆட்சி அமைந்தால் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவை.
எனவே தமிழக மக்களின் தீர்ப்பை ஏற்று முதல் கட்டமாக ஒரு ஆறு மாத காலத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் எந்தவித அழுத்தமும் நிபந்தனையும் இன்றி ஆதரவளிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications