2 திருமண விழா.. அன்று சி.பி ராதாகிருஷ்ணன்.. இன்று அரசகுமார்.. திமுகவை அடுத்தடுத்து புகழும் பாஜக!
பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், அரசகுமார் என்று இரண்டு பேர் அடுத்தடுத்து திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், அரசகுமார் என்று இரண்டு பேர் அடுத்தடுத்து திமுகவையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் புகழ்ந்து பேசுவது பெரிய சர்ச்சையாகி உள்ளது.
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இல்ல திருமண விழா தற்போது மிக முக்கியமான விழாவாக மாறியுள்ளது. பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார் இதில் கலந்து கொண்டு திமுகவை புகழ்ந்து பேசினார்.
பாஜகவின் மாநில துணை தலைவர் அரசகுமார், கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், அவர் அப்போது அப்படி எல்லாம் செய்யவில்லை. அவர் விதிகளுக்கு முரணாக செயல்படவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.
காலம் வரும்.. கட்டாயம் ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. பாஜக மாநில துணை தலைவர் பரபரப்பு.. என்ன நடக்கிறது?
என்ன சொன்னார்
தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். தமிழகம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
பெரிய சர்ச்சை
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மாநில துணை தலைவராக இருந்து கொண்டு அவர் இப்படி பேசலாமா? பாஜகவிற்கு திமுகவிற்கு நிறைய வாய்க்கால் தகராறு இருக்கும் போது அவர் இப்படி பேசலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு முன்
இதே போல் கடந்த சில மாதங்கள் முன் திருப்பூரில் திருமண விழா ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக திமுக தலைவர் ஸ்டாலின் திகழ்கிறார். தமிழக அரசியலில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் இருக்கிறார்.
சி.பி ராதாகிருஷ்ணன் என்ன
மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. அவர் மிகவும் சிறந்த தலைவர். பாஜக தலைவர்களை அவரை வியந்து பார்த்துள்ளனர், என்று புகழ்ந்து தள்ளினார்.
ஏன் இரண்டு
அவரின் இந்த பேச்சு அப்போதே தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மாநில துணை தலைவர் அரச குமாரும் இப்படி ஸ்டாலினை பேசி இருக்கிறார். பாஜகவின் வலுவான இரண்டு தலைவர்கள் ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள். பாஜகவின் கூட்டணியான அதிமுகவையும் இந்த பேட்டி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கூட்டணி?
இதனால் இந்த தலைவர்கள் மூலம் பாஜக கட்சி திமுகவிற்கு தூது விடுகிறதா என்றும் கேள்வி. திமுக மிகவும் வலுவாக இருப்பதால் அவர்களுடன் கூட்டணியை வைத்துக் கொள்ள பாஜக திட்டமிடுகிறதா, இதெல்லாம் பாஜகவின் திட்டமா என்று கேள்விகள் எழுந்துள்ளது.
கோபம்
இன்னொரு பக்கம் வேறு மாதிரியான கருத்துக்களும் வெளியாகி வருகிறது. சிபி ராதாகிருஷ்னன் மற்றும் அரசகுமார் இரண்டு பேரையும் பாஜக பெரிய அளவில் மதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவ கூட திட்டம் போடலாம். அதனால்தான் அரசகுமார் எனக்கு திமுக கரைவேட்டி கொடுங்கள் என்று மேடையிலேயே கேட்டார் என்றும் கூறுகிறார்கள்.
கட்சி தாவுகிறார்
அதே சமயம் இதற்கு பின் தமிழக பாஜக தலைவருக்கான போட்டியும் ஒரு காரணம் என்கிறார்கள். முதலில் தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான பரிந்துரையில் சி.பி ராதாகிருஷ்ணன், அரசகுமார் பெயரும் அடிபட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், அரசகுமார் இருவரும் மிகவும் வலுவான தலைவர்கள். தமிழக பாஜகவில் கொஞ்சம் விவரம் தெரிந்த தலைவர்கள்.
என்ன வலிமை
அதனால் இருவரில் ஒருவர் தமிழக பாஜக தலைவராக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இதனால் இவர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேச தொடங்கி உள்ளார் என்கிறார்கள். திமுகவுடன் எங்களால் கூட்டணி வைக்க முடியும் என்று பாஜக தேசிய தலைமைக்கு உணர்த்துவதற்காக இப்படி செய்கிறார்கள். பாஜக தேசிய தலைமையின் பார்வையை அவர்கள் தன் பக்கம் திருப்பி உள்ளனர்.
மிக கவனம்
தமிழகத்தில் திமுகவை வளைத்து போட்டால் எளிதாக ஆட்சியை பிடிக்கலாம். அதற்கு நாங்கள் உதவ ரெடி என்று இவர்கள் சொல்லாமல் சொல்வதாக பேசிக்கொள்கிறார்கள். இதற்கு தலைவர் பதவிக்கான போட்டிதான் காரணம். இதை கண்டிப்பாக பாஜக தேசிய தலைமை கவனமாக கையாளும் என்று பேசிக்கொள்கிறார்கள்.