சாமிய கும்பிட்டு பேர் வச்சேன்..இப்போ அது நிஜமாயிருச்சு! நெகிழ்ந்து பேசிய சிபி ராதாகிருஷ்ணனின் தாயார்
சென்னை: பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல வரவேண்டும் என எண்ணியே தனது மகனுக்கு ராதாகிருஷ்ணன் என பெயர் வைத்ததாகவும், தற்போது அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டதாக உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார் அவரது தாயார் ஜானகி அம்மாள்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளராக யாரை களம் இறக்கலாம் என பாஜக தீவிர ஆலோசனை செய்தது.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக தலைமை. இந்த தகவல் வெளியானதை அடுத்து திருப்பூரில் உள்ள சிபி ராதாகிருஷ்ணனின் வீட்டில் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

சிபி ராதாகிருஷ்ணன்
அவரது தாய் ஜானகி அம்மாள் பாஜக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிபி ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள்," எங்களுக்கு மகன் பிறந்த போது குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போல வரவேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டு ராதாகிருஷ்ணன் என பெயர் வைத்தோம். தற்போது உண்மையிலேயே அது நிறைவேறிவிட்டது.
சிபி ராதாகிருஷ்ணன் தாய்
நடக்கவிருக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ராதாகிருஷ்ணன் நிச்சயம் வெற்றி பெற்று மக்கள் சேவையை தொடர்ந்து செய்வார். அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பது தமிழ்நாட்டுக்கும் திருப்பூருக்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாக உள்ளது. அதே நேரத்தில் எனது மகனை குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பளித்த பாஜகவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறி இருக்கிறார்.
பாஜக தலைவர்
1957இல் அக்டோபர் 20ஆம் தேதி பிறந்த ராதாகிருஷ்ணன் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்கிறார். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டரான அவர் தனது அரசியல் வாழ்க்கையை சுவயம் சேவகராகவே தொடங்கினார். பாரதிய ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தமிழக பாஜக செயலாளராகவும் பணியாற்றியவர். 1998 மற்றும் 99 ஆம் ஆண்டுகளில் கோவையில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2004 முதல் 2007 வரை தமிழக பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை சென்றிருக்கிறார். நாடாளுமன்ற குழு உறுப்பினர், துணிநூல் தொடர்பான நிலை குழுவின் தலைவர், பாஜக தேசிய செயலாளர், கேரள பாஜக பொறுப்பாளர், ஜார்கண்ட் ஆளுநர், மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி
தற்போதைய சூழலில் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் 6 எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக இந்த தேர்தலில் 782 எம்பிக்கள் வாக்களிக்க இருக்கின்றனர். 392 எம்பிகளின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 422 எம்பிக்கள் இருக்கும் நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி தான் என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications