விஜய்க்கு கொள்கை தெளிவு இல்லை.. இவங்க 2 பேரையும் பக்கம் பக்கமா வச்சிக்கிட்டு எப்படி?: எச்.ராஜா
சென்னை: பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிட மாடல் எனக் கூறி தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி என இன்று நடந்த மாநாட்டில் பேசினார் தவெக தலைவர் விஜய். விஜய்யின் பேச்சு பற்றி தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.

சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய். மேலும், கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்" என்றார்.
ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது குறிப்பிட்ட கலரை பூசி, 'ஃபாசிசம்' என்று பேசிக்கொண்டு, சிறுபான்மை, பெரும்பான்மை பயத்தைக் காட்டுகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை 'திராவிட மாடல்' ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள் என்றார்.
மேலும், "பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" எனத் தெரிவித்தார் விஜய்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பாஜக தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பேசுகையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கொள்கை அளவில் தெளிவில்லாமல் இருக்கிறார். பெரியாரை அவர் கையில் எடுத்திருப்பதிலிருந்தே அது தெரிகிறது. கொள்கைகளில் ஒருவருக்கு ஒருவர் முரணாக உள்ள தலைவர்களை கொள்கைத் தலைவர்கள் எனக் கூறியுள்ளார்.
அம்பேத்கரையும், அவரை இழிவுபடுத்திய பெரியாரையும் பக்கத்தில் பக்கத்தில் வைத்துக்கொண்டு நான் அரசியல் கட்சி நடத்துவேன் எனக் கூறினால் அது எந்த மாதிரியான அரசியல்? ஆங்கிலேயரை எதிர்த்த வேலு நாச்சியாரையும், ஆங்கிலேயர்கள் இங்கிருந்து போகக்கூடாது என தீர்மானம் போட்டவரையும் ஏற்றுக்கொண்டதில் இருந்தே அவர் கொள்கையில் குழப்பமாக இருப்பதாகத் தெரிகிறது.
மாநிலத்தில் இருக்கிற குடும்ப அரசியல், கபடதாரிகள் என ஆட்சியில் உள்ள கட்சியை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார் விஜய். அது மட்டும்தான் தெளிவாக தெரிகிறது. மற்றதெல்லாம் பூடகமாக பேசி இருக்கிறார். விஜய் தேசியவாதியா? பிரிவினைவாதியா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நம்பிக்கையோடு வந்தவர்கள் தான். சிவாஜி கணேசனை விட பெரிய நடிகர் உண்டா? ஆனால் அவராலேயே அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. எல்லோராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "மதச்சார்பற்ற ஒரே கட்சியாக இருக்கும் பாஜகவிற்கு விஜய்யின் பேச்சால் எந்த பாதிப்பும் இல்லை, எங்களுக்கு அவர் போட்டியாக இருக்கவும் முடியாது. திராவிட கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் அவரால் உடைக்க முடியுமே தவிர, தெளிவில்லாத ஐடியாலஜியை வைத்துக்கொண்டு பாஜக போன்ற தேசிய கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications