“சிறுமிக்கு கொடுமை இழைத்த சாருடன் சாட்டையடி நாடகம் போட்டவர்” பாஜக நிர்வாகி கைது! பாய்ந்து வந்த திமுக
சென்னை: பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளது திமுக.
“15 வயது சிறுமிக்கு கொடுமை இழைத்த சாரை அரவணைத்து கொண்டே சாட்டையடி நாடகம் போட்டவர். இந்த கொடூர செயலுக்கு எத்தனை முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்? அப்படி அடித்துக்கொண்டால் இந்த முறையாவது ஒரிஜினல் சாட்டையை பயன்படுத்த வேண்டும்” என அண்ணாமலையை விமர்சித்துள்ளது திமுக.

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். எம்.எஸ்.ஷா மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக பிரமுகர் எம்.எஸ் ஷாவின் செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான மெசேஜ்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது பாஜக பிரமுகர் எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்ததாக குறிப்பிட்டார்.
சிறுமியின் தந்தை அளித்த இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மீதும், மாணவியின் தாய் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை போலீசார் நடத்தி வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் பேரில் பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவிடம் அனைத்து மகளிர் காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்திய நிலையில், இன்று, பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அண்மையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் அண்ணாமலை.
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். மேலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த நபருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விமர்சித்துள்ளது திமுக.
திமுக ஐ.டி விங் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “15 வயது சிறுமிக்கு கொடுமை இழைத்த சாரை அரவணைத்து கொண்டே சாட்டையடி நாடகம் போட்டவர். இந்த கொடூர செயலுக்கு எத்தனை முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்? அப்படி அடித்துக்கொண்டால் இந்த முறையாவது ஒரிஜினல் சாட்டையை பயன்படுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications