3 தொகுதிகளில் பாஜக லீடிங்.. '2'ல் டாப் கியர் - மொடக்குறிச்சியில் கடும் போட்டி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக, மாலை 5 மணி வரை மூன்று தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இதைமுன்னிட்டு, ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் ஸ்டாலின் இல்லத்துக்கு விரைந்துள்ளனர். ஏற்கனவே தேசிய தலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

பாஜக முன்னிலை
இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி, பாஜக மொத்தம் மூன்று தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மொடக்குறிச்சி, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இதில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் கடும் இழுபறி நீடிக்கிறது.

671 வாக்குகளே வித்தியாசம்
மொடக்குறிச்சியில் 18 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 55,397 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேசமயம், திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 54,726 அடுத்த இடத்தில் உள்ளார். வாக்கு வித்தியாசம் வெறும் 671 மட்டுமே.

17 ஆயிரம் வாக்குகள்
அதேசமயம், திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 14 சுற்றுகளின் முடிவில் 46,688 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் 30,986 வாக்குகள் பெற்று இராண்டாம் இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெறுவதால், அவரது வெற்றி இங்கு கனிந்து வருகிறது.

சறுக்கும் திமுக
அதேபோல், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 22 சுற்றுகள் முடிவில், 74,058 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் 58,887 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடிக்கிறார், 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காந்தி லீடிங்கில் இருப்பதால், அவரது வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications