60 நாட்களில் டாஸ்மாக் மது போதையால் நடந்த கொலைகள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் போட்டு விளாசிய பாஜக!
சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுவை அருந்தி போதையாகி, அதன் விளைவாக கடந்த 2 மாதங்களில் நடந்தேறிய கொலைகள் குறித்த பட்டியலை பாஜக நாராயணன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மது போதையால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சீமான், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பல காலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக் கடைகள் திறக்கப்படும் எனப் பேசி வருகிறார்.

இந்நிலையில், 60 நாட்களில் மது போதையினால் நடைபெற்ற கொலைகள் குறித்த பட்டியலை நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மது போதையினால் நடைபெற்ற கொலைகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
1. போதையில் தகராறு வண்டலூரில் இளைஞர் அடித்துக் கொலை : மார்ச், 04, 2024.
2. ஜனவரி 17, 2024 : மது குடிக்க பணம் கேட்டு தராததால் இலைஞர் குத்திக் கொலை.
3. ஜனவரி 6,2024, வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை.
4. பிப்ரவரி 20,2024 : கிருஷ்ணகிரியில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கிரிக்கெட் பேட்டாலேயே அடித்து கொலை செய்தனர்.
5.ஜனவரி 29, 2024, அணைக்கட்டு அருகே போதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞரை அடித்துக் கொன்றார் நண்பர்.
6.ஜனவரி 14,2024, சென்னை : உறங்கிக் கொண்டிருந்த தன்னை தட்டி எழுப்பி மது கேட்ட குடிமகன் மீது அந்த டாஸ்மாக் ஊழியர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி.
7. பிப்ரவரி 22, 2024, உசிலம்பட்டி : மது போதையில் தகராறு - பெரியகருப்பன் கத்தியால் குத்தியதில் பாண்டி படு கொலை.
8. பிப்ரவரி 14, 2024, ஊட்டி : ஊட்டியில் மதுவுடன் சேர்த்து போதை காளான் சாப்பிட்ட கல்லூரி மாணவி இறந்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.
9. பிப்ரவரி 5,2024, மதுரை : "அடிச்ச போதை பத்தலை, காசு கொடு" - தாயை கொடூரமாக அடித்தே கொன்ற மகன்.
இந்த வருடம் அதாவது 60 நாட்களில் நடைபெற்ற மது போதையினால் நடைபெற்ற கொலைகளில் இவை ஒருசில உதாரணங்கள் தான். 'டாஸ்மாக்' கடைகளில் விற்பனையாகும் மதுவை அருந்தி (கள்ளச்சாராயம் இல்லை) போதையாகி, பின்னர் அதன் விளைவாக நடந்தேறும் கொலைகளின் சிறு உதாரணமே இது. இவை அனைத்துமே ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். இதுதான் 'திராவிட மாடல்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications