யார் அந்த பெண்.. அடையாளம் தெரிந்தது.. கே.டி ராகவன் தொடர்பான வீடியோ: விசாரிக்கும் பாஜக மலர்கொடி
சென்னை: பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவனுக்கு எதிராக பாலியல் ரீதியான புகார் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணையை பாஜக மாநில செயலாளர் மலர்கொடி தொடங்கி உள்ளார். பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை விசாரிக்க போவதாக மலர்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே. டி ராகவன். கட்சியின் மூத்த உறுப்பினரான இவருக்கு எதிராக தற்போது பாலியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வீடியோ கால் ரெக்கார்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் கே. டி ராகவன் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. பாஜக முன்னாள் உறுப்பினர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது யூ டியூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டு கே.டி ராகவனுக்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்தார்.

குற்றச்சாட்டு
பெண்களிடம் கே. டி ராகவன் தவறாக நடந்து கொள்வதாக பாஜகவில் இருந்த மதன் ரவிசந்திரன் புகார் வைத்து இருந்தார். அதோடு தன்னிடம் இன்னும் சில வீடியோக்கள் இருப்பதாகவும், விரைவில் அந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மதன் தெரிவித்து இருந்தார். இதையடுத்து கே. டி ராகவன் பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்தார்.

விலகல்
இந்த நிலையில்தான் இன்று மதனின் யு டியூப் சேனல் முடக்கப்பட்டது. அதோடு அவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஒரே நாளில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் கே.டி ராகவனுக்கு எதிரான புகார் மீதான விசாரணையில் குதித்து இருக்கிறார் பாஜக மாநில செயலாளர் மலர்கொடி. இந்த புகார் வெளிவந்தவுடன் அது தொடர்பாக விசாரிக்க மலர்க்கொடி தலைமையில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை விசாரணைக்குழு அமைத்தார்.

விசாரணைக்குழு
இந்த புகார் குறித்து மலர்க்கொடி விரிவாக விசாரிப்பார், அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் மலர்க்கொடி தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கி உள்ளார். மலர்க்கொடி தனது விசாரணை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த புகார் குறித்து அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்துவோம். அனைத்து கோணத்திலும் விசாரணையை கொண்டு செல்வோம்.

அடையாளம் தெரிந்தது
இந்த வீடியோவில் இருக்கும் பெண் குறித்து விசாரித்து வருகிறோம். அவரின் அடையாளம் தெரிந்துவிட்டது. அவர் எப்படி ரகவானுடன் பேசினார், ஏன் பேசினார், அவர் பாஜகவின் உறுப்பினரா என்பதை வர கூடிய நாட்களில் விசாரிக்க உள்ளோம். ராகவனை திட்டமிட்டு சிக்க வைக்க வேண்டும் என்று ஏதாவது சதி வேலை செய்யப்பட்டதா என்று விசாரிப்போம்.

திட்டமிட்டு
இதற்காக திட்டமிட்டு அந்த பெண் பயன்படுத்தப்பட்டாரா என்பது குறித்தும் விசாரிப்போம். பாஜக தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அவருக்கு இந்த குற்றங்களின் தன்மைகள், அதை எப்படி விசாரிக்க வேண்டும் என்று தெரியும். அவர் எங்களுக்கு வழிகாட்டுவார். இந்த புகார் தொடர்பாக வேகமாக விசாரணை செய்து, தீர்வு காணும் திட்டத்தில் இருக்கிறோம், என்று மலர்க்கொடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications