10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்.. பாஜக MLA விடுதலை செல்லும்.. தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன்!
சென்னை: ஆள் மாறாட்டம் செய்து 10ஆம் வகுப்பு தேர்வெழுதிய வழக்கில் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ ஆக உள்ள கல்யாண சுந்தரத்தை விடுதலை செய்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியின் தற்போதைய பாஜக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் கல்யாணசுந்தரம். கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில், இதே காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மேலும், முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் கல்யாணசுந்தரம்.

2011ல் பள்ளிக்கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வில் தனித் தேர்வராகப் பங்கேற்றார் கல்யாணசுந்தரம். அப்போது, அவர் போலி ஆவணங்களைத் தயார் செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும், திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதாக, கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்தது தமிழக காவல்துறை.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார் கல்யாணசுந்தரம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கல்யாணசுந்தரம். அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.
பின்னர், திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கல்யாணசுந்தரத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும் ஆதவன், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு ஆசிரியர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி சரிதா.
அந்த தீர்ப்பை எதிர்த்து, விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் கல்யாணசுந்தரம். அந்த வழக்கை திண்டிவனம் அமர்வு நீதிமன்றமே மீண்டும் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது விழுப்புரம் நீதிமன்றம். அதனால் மீண்டும் திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார் நீதிபதி சண்முகநாதன்.
அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த அந்த வழக்கு, நேற்று காலை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போதுமான முகாந்திரம் இல்லை என்று கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
நீதிபதி ஜெயச்சந்திரன், அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்து, தண்டனை விவரங்களை வெளியிடுவதற்கு முன்பாக கல்யாணசுந்தரத்தின் வழக்கு விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டத்துறை செயலாளராக செயல்பட்டபோது, பொன்முடி சொத்துகளை முடக்கி உத்தரவிட்டவர் என்பதாக திமுக தரப்பு, பொன்முடி வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications