பிரதமர் மோடியை இழிவாக பேசிய திமுக நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கேட்கணும் - நயினார் நாகேந்திரன் காட்டம்
சென்னை: பிரதமர் மோடியை பொது மேடையில் இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசிமுத்து மாணிக்கம் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், ஜியான் தியேட்டர் அருகில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஏ.ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மகாலிங்கம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சித்து ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநிலச்செயலாளர் காசிமுத்துமாணிக்கம் பங்கேற்றுப் பேசினார்.

திமுக வர்த்தகர் அணி மாநிலச்செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி பற்றி கொச்சையாகப் பேசிய காசிமுத்து மாணிக்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்வில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறித்து திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆட்சேபிக்கத்தக்க வகையில் கொச்சையாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தேசத்தின் உயரிய பதவியில் இருக்கும் தலைவரைக் குறித்து பொது மேடையில் மலினமாகப் பேசுவதும், அதனை மேடையில் இருப்போரும், சுற்றி இருப்போரும் கைத்தட்டிச் சிரித்து ரசிப்பதும் ஒட்டுமொத்த திமுக உடன்பிறப்புகளின் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.
பிரதமரைக் குறித்து தகாத வார்த்தையில் பேசுவதில் தொடங்கி பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுப்பது வரை தொடர்ந்து அரசியல் மாண்பின் எல்லையை மீறி நடந்து கொள்ளும் திமுகவின் கீழ்த்தரமான போக்கை, இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது! பிரதமரை இழிவுபடுத்தியதற்கு திமுக மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
உலகமே போற்றும் தலைவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கொச்சையாகத் தூற்றும் திமுக மொத்தமாக அழியும் நாள் தூரமில்லை!" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.












Click it and Unblock the Notifications