#Exclusive திமுக ஊழல் செய்யாமல் பார்த்துக்கொண்டது பாஜக.. அதிமுக ஊழலாட்சினு சொல்லல.. நாராயணன் பரபர!
சென்னை: ஜெயலலிதா ஆட்சி ஊழல் ஆட்சி என முன்பு அமித் ஷா பேசவே இல்லை என்றும், 1999 முதல் பாஜக கூட்டணியில் தான் திமுக இருந்தது, அப்போது ஊழல் நடக்கவிடாமல் பாஜக பார்த்துக்கொண்டது என்றும் பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிய 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை துவக்கி வைத்து பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் வருவதற்காகத்தான் அண்ணாமலை பாத யாத்திரை செல்கிறார் என்று பேசினார். 2014, 2016 தேர்தல் காலகட்டங்களில் அதிமுக ஆட்சியை விமர்சித்த பாஜகவினர் இப்போது இவ்வாறு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நமது ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு:

கேள்வி: அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியோ, பாமக தலைவர்களோ கலந்துகொள்ளவில்லை. கூட்டணியில் இன்னும் நெருடல் இருக்கிறதோ?
நாராயணன் திருப்பதி: பாஜகவின் பாதயாத்திரை என்பதால் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இது ஒரு கூட்டணி நிகழ்ச்சி அல்ல. எனினும், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த விஷயத்தில் பூதக் கண்ணாடி அணிந்துகொண்டு, எடப்பாடி பழனிசாமி வரவில்லை, அவர் வரவில்லை எனப் பேசுவதெல்லாம் எங்களுக்குத் தேவையற்றது. திமுக தலைவர் நடைபயணம் சென்றபோது கூட்டணி கட்சி தலைவர்களும் சென்றார்கள் என்பதற்காக நாங்களும் அப்படிச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 2 சீட்டுக்கு 10 கோடி கொடுப்பார்கள். அதைப்போல எல்லா கட்சிகளும் செய்ய வேண்டுமா? எங்கள் கூட்டணி இணக்கமாகவே இருக்கிறது. கூட்டணியில் இருப்பதால் ஒரே கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றும் கட்டாயமில்லை. உதாரணமாக ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே கருத்தைத்தான் சொல்வார்கள். அப்படி என்றால் இரு கட்சிகளும் கூட்டணியா? அவ்வளவுதான்.

கேள்வி: பாதயாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டு சேர்ப்போம் எனச் சொல்கிறார். அதிமுக ஆட்சி ஊழலாட்சி என 2016 தேர்தலில் சொன்னது பாஜக. இப்போது எந்தப் புள்ளியில் ஜெயலலிதா ஆட்சி நல்லாட்சி என்ற இடத்திற்கு பாஜக நகர்ந்துள்ளது?
பாஜக நாராயணன்: தமிழ்நாட்டில் சிஸ்டம் ஊழல் மயமாக இருக்கிறது என்றுதான் அமித் ஷா முன்பு சொன்னார். அந்தக் கூட்டத்தில் நானும் இருந்தேன். எல்லா துறைகளிலும் கடந்த 40 50 வருடங்களாக ஊழல் மலிந்திருக்கிறது. சிஸ்டம் முழுக்கவே ஊழல் இருக்கிறது. அரசியல்வாதிகள், கட்சிகள் மட்டும் தானா ஊழல் செய்கின்றன?
கேள்வி: 1967ல் இருந்து தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. அதிமுகவை பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் இங்கிருக்கும் ஊழலை ஒழிக்கப் போகிறீர்களா?

நாராயணன் திருப்பதி: இந்த சிஸ்டத்தை பாஜக மாற்றவேண்டும் என நினைக்கிறோம். அதிமுகவில் கட்சி என்றில்லை, சில நபர்கள் பிரச்சனையாக இருக்கலாம். பாஜகவில் கூட சிலர் பிரச்சனைக்கு உரியவர்களாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தை மாற்ற பாஜக ஒரு மெக்கானிசத்தை செயல்படுத்துகிறது. கட்சியின் தலைவர்களுக்காக நாங்கள் இல்லை. கொள்கைகளுக்காக, நிர்வாகத் திறன்களுக்காகவே பயணிக்கிறோம்.
1999 முதல் 2004 வரை திமுக உடன் கூட்டணியில் இருந்தோம். அந்த 5 ஆண்டுகளில் திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. ஏன்? எங்களுடைய மெக்கானிசம். பாஜகவின் சிறப்பான ஆளும் திறனால், ஊழல் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications