திமுகவிற்கு இவரால் தான் 'ஆபத்து'.. ஆர்.எஸ்.பாரதி அதிர்ச்சி பேச்சு பற்றி பாஜக கடுமையான ‘வார்னிங்’!
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி தரக்குறைவாகப் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - திமுக அரசு இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், ஆளுநர் பற்றி திமுக அரசு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளது.
திமுகவினர் ஆளுநர் ரவிக்கு எதிராகப் பேசி வரும் நிலையில் ஆளுநரை கடுமையாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் எழுந்த சர்ச்சை
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்த நிலையில், ஆளுநர் தாமாகப் பேசிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது உடனடியாக அவையில் இருந்து ஆர்.என்.ரவி வெளியேறினார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரையே அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.

ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுக அரசு சார்பில் குடியரசுத் தலைவரிடம் முறையிடப்பட்டுள்ளது. ஆளுநரைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு, ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒருமையில் விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைப் பேச்சு
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆளுநர் பற்றிக் கடுமையான வார்த்தைகளால் பேசிய முன்னாள் எம்.பி ஆர்.எஸ்.பாரதி, "முதலமைச்சர் நினைத்திருந்தால், துரைமுருகனை எழுந்திருக்கச் சொல்லி கவர்னரை அவையிலிருந்து வார்டன்களை வைத்து வெளியேற்றியிருக்கலாம். சபாநாயகர் தான் அந்த அவையின் கஸ்ட்டோடியன். அதற்குள் என்ன நடந்தாலும் யாரும் கேஸ் போட முடியாது. அதான் ப்ரொவிஷன்" எனத் தெரிவித்தார்.

பாஜக கண்டனம்
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, ஆர்.எஸ்.பாரதிக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "ஒரு கேடுகெட்ட, தரக்குறைவான, தரம் தாழ்ந்த இந்த நபர், பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரை தொடர்ந்து சாக்கடையில் ஊறியது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வந்த நிலையில், இப்போது ஒரு ரௌடியை போல் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரிடம் சொல்லி விட்டுத் தான் அந்த கூட்டத்தில் பேசுவதாக சொன்னபோது பார்த்து பேசவும் என்று அவர் கூறியதாகவும் சொல்கிறார்.

அடிப்போம் உதைப்போம் என பேசலாமா
ஜனநாயக நாட்டில் ரௌடித்தனம் மூலம் ஆட்சி செய்ய தயங்க மாட்டோம் என்று உயர் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவர் சொன்னதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துக்கொண்டு, கேட்டு கொண்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த மாநிலத்தின் முதல் நபரை, ஆளுநரை அடிப்போம், உதைப்போம், என்றெல்லாம் பேசியிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பது திமுகதான் என்பதை உறுதி செய்கிறது.

சிறையில் அடையுங்கள்
தொடர்ந்து தரக்குறைவாக பேசி வந்த ஆர்.எஸ்.பாரதியை அனைவருக்குமான முதல்வர் என்று மார்தட்டிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் தனக்கு சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை உணர்ந்து, உடனடியாக இந்த நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்தில் 'ரௌடி லிஸ்ட்டில்' இடம்பெற வேண்டிய இந்த நபர், ஒரு ஆறு மாதங்களாவது சிறையில் இருந்தால் தான் திருந்துவார். இல்லையேல், திமுகவிற்கு 'ஆபத்து தான்'. வெட்கக்கேடு தான்!" என காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications